புரூலியா ஆயுத வீச்சு: டென்மார்க் தூதரக உறவை குறைக்க இந்தியா முடிவு
இதையடுத்து டென்மார்க்குடனான தூதரக உறவுகளை படிப்படியாகக் குறைத்துக் கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது
கடந்த 1995-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்குவங்க மாநிலம் புரூலியா மாவட்டத்தில் விமானம் மூலமாக மர்மமான முறையில் ஆயுதங்கள் வீசப்பட்டன. இதில் ஏ.கே.-47 துப்பாக்கிகள், கையெறிகுண்டுகளும் அடக்கம்.
இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கிம் டேவி மீது வழக்குப் பதிவு செய்து. அவர் தற்போது டென்மார்க்கில் உள்ளதால் அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டு வர சி.பி.ஐ அதிகாரிகள், இன்டர்போல் மூலம் நடவடிக்கை எடுத்தனர்.
இதை எதிர்த்து கிம் டேவி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், இந்திய சிறைச் சாலைகளின் தரம், மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி கிம் டேவியை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டது.
இதையடுத்து டென்மார்க் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை அப்பீல் செய்து டேவியை இந்தியாவிடம் ஒப்படைக்க உதவ வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்தது. ஆனால், அந்தக் கோரிக்கையை டென்மார்க் அரசு ஏற்க மறுத்து வருகிறது.
இதைத் தொடர்ந்து டென்மார்க் அரசுடன் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை இந்தியா நடத்தியது. அதிலும் பலன் ஏற்படவில்லை.
இதையடுத்து டென்மார்க்குடனான தூதரக உறவுகளை படிப்படியாகக் குறைத்துக் கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த விஷயத்தில் இந்தியாவின் அதிருப்தியை தூதர் மூலம் டென்மார்க் அரசிடம் மத்திய அரசு தெரிவித்துவிட்டது. மேலும் டென்மார்க்கில் உள்ள இந்தியத் தூதரகத்தின் ஊழியர்கள் எண்ணிக்கையையும் பணிகளையும் பணிகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இந்தியாவில் உள்ள டென்மார்க் தூதரக அதிகாரிகளை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் சந்திக்கக் கூடாது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.