அங்கிட்டு ஒரு கால்.. இங்கிட்டு ஒரு கால்... ஆடு புலி ஆட்டம் ஆடும் ஐக்கிய ஜனதா தளம்
டெல்லி: குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்களில் ஐக்கிய ஜனதா தளம் கில்லாடியான ஆடு புலி ஆட்டத்தை ஆடிவருகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் பிரணாப் முகர்ஜியை ஆதரித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை கலகலக்க வைத்தது ஐக்கிய ஜனதா தளம்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலும் கூட அன்சாரியையே ஒருமனதாக வேட்பாளராக்கலாம் என்று கருத்துத் தெரிவித்திருந்தார் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார்.
ஆனால் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் ஓடிவிடாமல் இருக்க அக்கட்சியின் தலைவரான சரத்யாதவையே வேட்பாளராக அறிவிக்க திட்டம் போட்டது பாஜக. ஆனால் போட்டியிடப் போவதில்லை என்று சரத் யாதவ் கூறிவிட்டார். இருப்பினும் தம்மை வேட்பாளர் நிலைமைக்கு பரிசீலித்து விட்ட பாஜகவை விட்டு போகமனமில்லாமல் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் "குடியரசுத் தலைவர் தேர்தலுக்கும் துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதாவது பிரணாப் முகர்ஜி பழுத்த அரசியல்வாதி. நல்ல அனுபவம் உள்ளவர் என்பதால் மட்டுமே அவரை ஆதரித்தோம். அதற்காக காங்கிரஸை ஆதரிக்கிறோம் என்று அர்த்தம் அல்ல. நான் அரசியலுக்கு வந்த நாள் முதல் காங்கிரஸை ஆதரித்தது இல்லை" என்று கூறி தாம் பாஜக அணியில்தான் இருப்போம் என்று உறுதிப்படுத்தியிருக்கிறார்.
எப்படியோ பாஜகவின் திட்டம் ஒர்க் அவுட் ஆகிவிட்டது. இருந்தாலும் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆடு புலி ஆட்டத்தின் மூலமாக அதாவது குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரித்ததால் ஐக்கிய ஜனதா தளம் ஆளுகிற பீகார் மாநிலத்துக்கு லம்ப்பா ஒரு சிறப்பு நிதியை அள்ளிச் சென்றிருக்கிறது.
அப்ப ஆட்டத்தில ஐக்கிய ஜனதா தளம்தான் ஜெயிச்சுடுச்சா?