ஏ.கே. அந்தோணிக்கு 2-வது இடம் கொடுப்பதா?: கடும் அதிருப்தியில் சரத்பவார்
மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பிரணாப் முகர்ஜி 2-வது இடம் பெற்றிருந்தார். தற்போது அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதால் 2-வது இடம் காலியானது. இந்த இடத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணியை நியமித்து சில நாட்களுக்கு முன்பு மன்மோகன்சிங் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் அந்தோணியைவிட அனுபவத்தில் மூத்தவரான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு இது மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரணாப் முகர்ஜிக்கு அடுத்து 3-வது இடத்தில் இருந்தவர் சரத்பவார் தான். அவருக்குப் பின்னர் 4-வது இடத்தில்தான் அந்தோணி இருந்துவந்தார். இதனால் தமக்கு வழங்கப்படவேண்டிய 2-வது இடத்தை ஏ.கே. அந்தோணிக்கு கொடுத்ததில் எரிச்சலடைந்திருக்கிறார் சரத்பவார்.
தங்களது கட்சியை ஆலோசிக்காமல் அமைச்சரவையில் இடமாற்றம் ஏற்படுத்தியது அநீதி என்பது தேசியவாத காங்கிரசின் கருத்து. இதனாலேயே குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தொடர்பான கூட்டத்தை சரத்பவார் புறக்கணித்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.
இந்த அதிருப்தி மனோநிலை குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிரொலிக்குமோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தங்களது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி இன்று தேசியவாத காங்கிரஸ் ஆலோசனை நடத்துகிறது,