பெண் சிசுக் கொலைக்கு எதிராக குரல் கொடுத்த கிராமத்திற்கு ரூ. 1 கோடி நிதி
ஹரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டத்தில் உள்ள பிபிபூர் கிராம காப் பஞ்சாயத்து பெண் சிசுக்களை கொலை செய்வது கொடூரச் செயல் என்றும், அவ்வாறு செய்பவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் பெண் சிசுக் கொலை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அந்த பஞ்சாயத்து பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த பஞ்சாயத்து கூட்டத்தில் ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த காப் பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பெண் சிசுக்கள் கொல்லப்படுவதால் பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதையடுத்து தான் பஞ்சாயத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த ஹரியானா முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா பிபிபூரின் வளர்ச்சிக்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். மேலும் இந்த காப் பஞ்சாயத்து போன்று மற்ற பஞ்சாயத்துகளும் பெண் சிசுக் கொலைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசு என்னதான் பெண் சிசுக் கொலைக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் மக்கள் ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் அது வீண் தான் என்று அவர் மேலும் தெரிவித்தார்.