கோவில்பட்டி அருகே ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு 2 ஆசிரியர்கள்
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே உள்ள என். சுப்புலாபுரத்தில் மாணவ, மாணவிகளே இல்லாத பஞ்சாயத்து யூனி்யன் தொடக்கப்பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கோவில்பட்டி அருகே புதூர் யூனியனுக்கு உட்பட்ட கருப்பூர் பஞ்சாயத்து என். சுப்புலாபுரத்தில் கடந்த 1963ம் ஆண்டு அரசு பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. அப்போது அந்த பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்தனர். நாளடைவில் இக்கிராமத்தில் விவசாய தொழில் படிப்படியாக குறையத் தொடங்கியதால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான விவசாயிகள் வேலை தேடி குடும்பத்துடன் இடம் பெயர்ந்தனர். இதனால் பள்ளியில் ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் வெறும் 7 மாணவ, மாணவிகள் மட்டும இருந்தனர்.
இவர்களுக்கு 2 ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். கடந்த ஆண்டு இப்பள்ளியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மட்டும் படித்தனர். இவர்களுக்கும் அதே 2 ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். இந்நிலையில் பள்ளியில் படித்து வந்த மாணவ, மாணவிகள் குடும்பத்துடன் வெளியூருக்கு இடம் பெயர்ந்ததால் நடப்பு ஆண்டில் ஒரு மாணவ, மாணவி கூட இல்லாத நிலையில் ஆசிரியர்கள் மட்டும் தினமும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.