ரகசிய சந்திப்புக்குப் பின் 'குட்டு' உடைந்தது: குர்ஷித் மீது ஹசாரே கோபம்
பூனே: மத்திய அரசு தனது குழுவை உடைக்க சதித்திட்டம் தீ்ட்டுவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார்.
லோக்பால் மசோதா குறித்து மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவை கடந்த மாதம் 23ம் தேதி பூனே அருகில் உள்ள கேத் தாலுக்கில் உள்ள கெஸ்ட் ஹவுஸில் வைத்து சந்தி்த்து பேசியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து அன்னா நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடந்த மாதம் 23ம் தேதி சல்மான் குர்ஷித் என்னை சந்தித்து லோக்பால் மசோதா குறித்து பேசினார். அப்போது அவர் இந்த சந்திப்பு ரகசியமாகவே இருக்கட்டும், உங்கள் குழுவினருக்குக் கூட தெரிய வேண்டாம். பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் பேசிவிட்டு நாம் இருவரும் கூட்டாக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து அதில் வலுவான லோக்பால் மசோதா குறித்து அறிவிப்போம் என்றார். மேலும் வரும் 25ம் தேதி நாங்கள் நடத்தவிருக்கும் உண்ணாவிரத போராட்டத்திற்கு முன்பு லோக்பால் பிரச்சனைக்கு நல்ல தீர்வு காண்பதாகவும் உறுதியளித்தார்.
நானும் அவர் பேச்சை நம்பி இந்த சந்திப்பு பற்றி எனது குழுவினரிடம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் கடந்த 16ம் தேதி மத்திய அமைச்சர் நாராயணசாமி எனக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், அண்மையில் நடந்த சந்திப்பில் நான் லோக்பால் மசோதா குறித்து மக்கள் கருத்தை கேட்க விரும்பியதாகத் தெரிவித்ததை பிரதமரிடம் அவர் கூறியதாக குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் ஆள் மூலம் அனுப்பப்பட்டு அது என் குழுவினர் கையில் கிடைத்துள்ளது. இதன் மூலம் அந்த ரகசிய சந்திப்பு பற்றி எனது குழுவினருக்கு அவர்கள் தெரிவித்துவிட்டனர். இது நம்பிக்கை துரோகமாகும்.
சமுதாயத்திற்கு ஏதாவது நன்மை நடக்கும் என்ற நம்பிக்கையில் நான் அவரை சந்திக்க சென்றேன். ஆனால் என்னை ஏமாற்றிவி்ட்டனர். யாரையும் நம்புவது நல்லதல்ல என்பதை தெரிந்து கொண்டேன். இனிமேல் லோக்பால் மசோதா குறித்து எந்த அமைச்சருடனும் பேசத் தயாராக இல்லை என்றார்.
மேலும் அவர் இந்த விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
அன்னா குழுவைப் பிரிக்க நடக்கும் சதியில் நீங்களும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சேர்ந்து கொண்டுள்ளீர்கள். இத்தனை கெட்ட குணங்கள் உள்ள தலைவர்களால் இந்த நாட்டின் எதிர்காலம் என்னவாகப் போகிறதோ? என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அன்னா குழுவை பிரிக்க யாரும் சதி செய்யவில்லை என்று சல்மான் குர்ஷித் தெரிவி்த்துள்ளார்.