தினசரி 10 லட்சம் புன்னகை! - பேஸ்புக்கில் கலாம் நன்றி
"தூங்கும் போது காண்பதல்ல கனவு, நம்மை தூங்கவிடாமல் செய்வதே லட்சியக்கனவு" என்று கூறி இந்திய இளைய தலைமுறையினரை கனவு காண அறிவுறுத்தியவர் அப்துல்கலாம். 2020-ல் இந்தியா வல்லரசு ஆவது இளைஞர்களின் கையில்தான் உள்ளது என்று நம்பிக்கையோடு கூறி வரும் அவர் தன்னுடைய அனுபவம், கருத்து ஆகியவற்றைப் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ள சமூக இணையதளமான பேஸ்புக்கில் www.facebook.com/officialkalam எனும் பக்கத்தை அவர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். 81 வயதான கலாம் தனது எண்ணங்களையும் செயல்பாடுகளையும் தினசரி அதில் பதிவு செய்து வருகிறார். இந்த பக்கத்தில் ஏராளமானோர் இணைந்து, கலாமின் கருத்துகளைக் படித்தும், அதற்கு தங்களின் உணர்வுகளையும், எண்ணங்களையும் பதிவு செய்தும் வருகின்றனர். தற்போது கலமின் பக்கத்தை 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தொடர்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.
இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள கலாம் தனது பக்கத்தில், 'நண்பர்களுக்கு நன்றி. நாம் இப்போது 10 லட்சம் பேராக, வலிமை வாய்ந்த சமூகமாக உருவாகி உள்ளோம். தினசரி ஒருவரை புன்னகைக்கச் செய்யவேண்டும் என்று நினைப்பேன். இப்பொழுது நாடுமுழுவதும் பத்துலட்சம் பேர் புன்னகைகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, தங்களது சிறந்த கருத்து, கனவு மற்றும் செயல்பாடுகளை தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள், என்று தெரிவித்துள்ளார்.
கலாம் தனது பேஸ்புக் பக்கத்தில் இணையதளத்தையும், யூ டுயூப், ப்ளாக்ஸ் போன்றவைகளையும் இணைத்துள்ளார். தற்போது கலாம் பவுண்டேசனுக்கு தலைராக உள்ள அவர் இதன்மூலம் நாடுமுழுவதும் கல்வித்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த பாடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.