மேற்கு வங்க சட்டபேரவைத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது: மமதா பானர்ஜி அறிவிப்பு
கொல்கத்தாவில் 1993-ம் ஆண்டு நடைபெற்ற போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 இளைஞர் காங்கிரசார் உயிரிழந்ததன் நினைவு நிகழ்ச்சியையொட்டி பிரம்மாண்ட பேரணியை திரிணாமுல் காங்கிரஸ் நடத்தியது. இந்நினைவு பேரணியின் முடிவில் பல்வேறு அதிரடியான முடிவுகளை ம்மதா பானர்ஜி அறிவித்திருக்கிறார்.
மமதா பேசியதாவது:
மேற்குவங்க மாநிலத்தில் இனிவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும். எங்களது கூட்டணி டெல்லியில் மட்டும்தான். அதாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் மட்டும்தான். எங்களுக்கு மரியாதை கிடைக்கும் வரை அங்கு இருப்போம்..
மேற்குவங்க மாநிலத்தை ஆண்ட இடதுசாரி அரசாங்கம் மத்திய அரசிடம் இருந்து ரூ2.6 லட்சம் கடன் வாங்கியிருக்கிறது. அந்த கடனுக்கான வட்டியை திருப்பி செலுத்த 3 ஆண்டுகாலமாவது தேவைப்படும். இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து திரிணாமுல் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திப்போம். எங்களுடன் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சாவினரும் உடன் வருவார்கள்.
எந்த ஒரு சிறப்பு நிதித் திட்டத்தையும் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. டெல்லியின் கருணைப் பார்வை எங்களுக்கு தேவையில்லை. நாங்கள் இன்னும் சிறிது காலம் போறுத்துப் பார்ப்போம். இல்லையெனில் டெல்லிக்கு படையெடுப்போம்.
எதிர்வரும் கூர்க்காலாந்து நிர்வாகத்துக்கான தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடாது. அறிவித்திருக்கும் 17 வேட்பாளர்களையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி திரும்பப் பெறுகிறது என்றார் அவர்.