ஓட்டை பஸ்சுக்கு எப்சி கொடுத்த விவகாரம்- ஆர்டிஓ சஸ்பெண்ட், மோட்டார் வாகன ஆய்வாளர் கைது
7 வயதான ஸ்ருதி, சேலையூரில் உள்ள தனது பள்ளியிலிருந்து மாலையில் பேருந்து மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அப்போது முடிச்சூர் சாலையில் பேருந்து போய்க் கொண்டிருந்தபோது திடீரென பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்து விட்டாள். இதில் பேருந்தின் சக்கரம் அவளது தலையில் ஏறி பரிதாபமாக உயிரிழந்தாள்.
அனைவரின் நெஞ்சங்களையும் இந்த துயரச் சம்பவம் உலுக்கி எடுத்துள்ளது. இன்னும் மக்கள் இந்தக் கோரச் சம்பவத்தின் பிடியிலிருந்து மீளாமல் உள்ளனர்.
இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தானாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டது. ஓட்டை பஸ்சுக்கு எப்படி எப்சி கொடுத்தார்கள் என்று கேட்டுள்ள உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட அனைவரும் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து தமிழக அரசு நேற்று பிற்பகலுக்கு மேல் திடீரென தனது உறக்கத்தை நிறுத்திக் கொண்டு சுறுசுறுப்பாக நடவடிக்கையில் இறங்கியது. உயர்நீதிமன்ற உத்தரவு வரும் வரை சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் யார் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை, விசாரணை நடத்தவில்லை, கண்டு கொள்ளவே இல்லை. ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவு வந்ததைத் தொடர்ந்து இன்று கோர்ட்டில் நீதிபதிகள் முன்பு பதிலளிக்க முடியாமல் போய் விடக் கூடாதே என்பதற்காக தாம்பரம் ஆர்டிஓ பட்டப்பசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் ஆகிய இருவரையும் வேகம் வேகமாக நேற்று மாலையில் சஸ்பெண்ட் செய்தனர். பின்னர் ராஜசேகரனை மட்டும் கைது செய்தனர்.
இந்த ராஜசேகரன்தான் 20 நாட்களுக்கு முன்பு ஸ்ருதியின் உயிரைப் பறித்த பேருந்துக்கு நல்ல நிலையில் உள்ளது என்று கூறி எப்சி கொடுத்தவர் ஆவார். இவர் மீது தற்போது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவான ஐபிசி 304-2ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது கொலை வழக்குக்கு சமமானதாகும்.
தேவைப்பட்டால் ஆர்டிஓவும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.