விருதுநகரில் பள்ளி மாணவியை கண்மூடித்தனமாக அடித்த ஆசிரியை பணியில் இருந்து நீக்க உத்தரவு
விருதுநகர்: விருதுநகரில் 3ம் வகுப்பு மாணவியை கண்மூடித்தனமாக அடித்த ஆசிரியை எஸ்தர் ராணியை பணி நீக்கம் செய்யுமாறு, பள்ளி நிர்வாகத்துக்கு விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
விருதுநகரை அடுத்த வடமலைக்குறிச்சியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் அபிராமி(7). விருதுநகரில் உள்ள செவன்த் டே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 28ம் தேதி பள்ளிக்கு சென்ற அபிராமியை, வகுப்பு ஆசிரியை எஸ்தர் ராணி ஆங்கில பாடத்தை வாசிக்கமாறு கூறியுள்ளார்.
அப்போது வாசித்த சத்தம் கேட்கவில்லை என்று கூறிய ஆசிரியை எஸ்தர் ராணி, குச்சியால் அபிராமியின் கால், தொடை, முதுகு, தலை பகுதிகளில் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுமி அபிராமி வகுப்பில் வலி தாங்க முடியாமல் கீழே விழுந்துள்ளார்.
இந்த நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு அழுது கொண்டே சென்ற சிறுமியின் உடலை அவரது தாய் மணிமேலை பார்த்துள்ளார். அப்போது சிறுமியின் உடல் முழுவதும் காயமாக இருந்துள்ளது.
இதில் அதிர்ச்சி அடைந்த மணிமேலை, பள்ளிக்கு சென்று முதல்வரிடம் புகார் அளித்தார். மேலும் சம்பவத்தன்று சிறுமியின் அபிராமியின் தந்தை சீனிவாசன், விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதை அறிந்த ஆசிரியை எஸ்தர் ராணி தலைமறைவானார். இந்த நிலையில் பள்ளி மாணவி அபிராமியை கண்மூடித்தனமாக அடித்த ஆசிரியை எஸ்தர் ராணியை பணி நீக்கம் செய்யுமாறு, பள்ளி நிர்வாகத்திற்கு விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications