சப் இன்ஸ்பெக்டராக இருந்து உள்துறை அமைச்சரான சுஷில் குமார் ஷிண்டே!
மத்திய அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்து, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு, நாட்டின் முதல் குடிமகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் மத்திய அமைச்சரவையில் சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது. இதில் உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திற்கு நிதி இலாகா வழங்கப்பட்டது.
மேலும் மின்துறை அமைச்சராக இருந்து சுஷில் குமார் ஷிண்டேவுக்கு, உள்துறை இலாகா வழங்கப்பட்டது. இதையடுத்து ஷிண்டேவின் மின்துறை இலாகாவை, கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூடுதலாக கூடுதலாக கவனித்து கொள்ள உள்ளார்.
புதிய உள்துறை அமைச்சராக பதவி அளிக்கப்பட்டுள்ள சுஷில் குமார் ஷிண்டே மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்ட்ராக இருந்த ஷிண்டே, தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு கடந்த 1971ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். கர்மலா தனி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.
அதன்பிறகு அரசியல் வாழ்க்கையில் ஷிண்டே படிபடியாக உயர்ந்தார். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் சோலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் 1978, 1980, 1985, 1990 என்று 5 முறை தொடர்ந்து வெற்றி பெற்றார். மாநில அமைச்சரவையில் நிதி மற்றும் கலாச்சார அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
கடந்த 1992 முதல் 1998ம் ஆண்டு வரை மகாராஷ்டிராவில் இருந்து ராஜ்சபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கடந்த 2002ம் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆந்திர மாநில ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது 71 வயதாகும் சுஷில்குமார் ஷிண்டே, நாட்டின் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.