சுதந்திரம் அடைந்தது முதலே இந்தியாவில் மின் தடை தான்!
இந்தியாவின் மின்சார நிலைமை குறித்த ஒரு சிறு பார்வை...
- இந்தியாவில் 1 லட்சத்து 70 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய உற்பத்திப் பிரிவுகள் உள்ளன. இது நாடு சுதந்திரமடைந்தபோது அதாவது 1947ம் ஆண்டில் வெறும் 1362 மெகாவாட்டாக மட்டுமே இருந்தது.
- இந்தியாவின் பெரும்பாலான மின்சார உற்பத்தி நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரியை நம்பியே உள்ளது. அதாவது 60 சதவீத மின் உற்பத்தி இவற்றிலிருந்துதான் நடைபெறுகிறது. நீர் மின்சார உற்பத்தியின் அளவு 22 சதவீதம்தான்.
- உலகிலேயே தனி நபர் மின்சார நுகர்வு அளவு இந்தியாவில் மிகவும் மோசமாக உள்ளது. அதாவது 734 யூனிட்டுகளாக உள்ளது. உலக தனி நபர் மின்சார நுகர்வின் அளவு 2429 யூனிட்டுகளாகும்.
- அமெரிக்காவில் தனி நபர் மின்சார நுகர்வு அளவானது 13,647 யூனிட்டுகளாகும். கனடாவில்தான் அதிகபட்சமாக 18,347 யூனிட்டுகளாக உள்ளது.
- சீனாவின் நிலைமை நம்மை விட பரவாயில்லை. அதாவது அங்கு 2456 யூனிட்டுகளாக உள்ளது. உலக சராசரியை விட இது அதிகமாகும்.
- இந்தியாவில் ஆண்டு தோறும் 7 சதவீத அளவுக்கு மின் துறையில் வளர்ச்சி இருப்பதாக கூறப்பட்டாலும் கூட தனி நபர் மின்சார நுகர்வானது அதிகரிக்காமலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவில் 1970-71ல் தொழில்துறை மின் நுகர்வானது 61.6 சதவீதமாக இருந்தது. இது 2008-09ல் 38 சதவீதமாக குறைந்து விட்டது.
- தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறையை விட வீடுகள், விவசாயத்திற்குத்தான் இந்தியாவில் அதிக அளவில் மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றனர்.
- சுதந்திரமடைந்தது முதலே இந்தியாவில் மின்தடையானது அன்றாட நிகழ்வாகி விட்டது. உச்சகட்ட நேரத்தில் மின்சாரப் பற்றாக்குறையானது 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. ஒட்டுமொத்த மின்சாரப் பற்றாக்குறை 7 சதவீதத்திற்கும் மேலாக உள்ளது.
- நாடு சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளாகியும் கூட இந்தியாவில் இதுவரை ஆந்திரா, தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா, கோவா, டெல்லி, ஹரியானா, கேரளா, பஞ்சாப் ஆகிய 9 மாநிலங்களில் மட்டுமே முழுமையாக மின்சார வசதியுடன் கூடிய மாநிலமாக உள்ளன.
- மின்சாரத் துறைக்கு ஆண்டு தோறும் 15 சதவீதம் மற்றும் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிற போதிலும் மின் பற்றாக்குறை நாடாகவே இந்தியா திகழ்கிறது. நாட்டின் பெரும்பாலான மின்வாரியங்கள் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன. நிலக்கரிப் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. அரசு வழங்கும் மானிய உதவிகளை ஏழை விவசாயிகளை விட பணக்கார விவசாயிகளே அதிகம் பெற்று பயன் அடைகின்றனர். மின் திருட்டு அதிகம் உள்ளது.
- மின்சாரத்தை அனுப்புவதிலும், விநியோகிப்பதிலும் வீணாகும் மின்சாரத்தின் அளவும் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே போகிறது. 1995-96ல் இது 22 சதவீதமாக இருந்தது. 2009-10ல் இது 25.6 சதவீதமாக உயர்ந்தது. இப்படி மின்சாரத்தை வீணடிப்பதில் நாட்டிலேயே மோசமான மாநிலங்களாக காஷ்மீர், பீகார், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் ஆகியவை உள்ளன. மின்சாரத்தை பெருமளவில் வீணடிக்காத மாநிலங்களாக தமிழ்நாடு, பஞ்சாப், இமாச்சல் பிரதேசம், ஆந்திரா ஆகியவை உள்ளன.
- நாட்டில் தற்போது 80 சதவீத மின்சார விநியோகத்தை அரசு நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. 20 சதவீதத்தை தனியார் நிறுவனங்கள் கவனிக்கின்றன.