கொலை வழக்கில் சி.பி.எம். எக்ஸ் எம்.எல்.ஏ. கைது- கண்டனம் தெரிவித்து கேரளா முழுவதும் முழு அடைப்பு
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிகழ்த்தி வரும் அரசியல்படுகொலைகள் தொடர் கதையாகிவிட்டன. கண்ணூர் மாவட்ட முன்னாள் மார்க்சிஸ்ட் நிர்வாகி சுக்கூரை படுகொலை செய்த வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயராஜன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இக்கைதைக் கண்டித்து கேரள மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.
இடுக்கி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து விலகிய சந்திரசேகரன், மார்க்சிஸ்ட் கட்சியினரால் படுகொலை செய்யப்பட்டார். அதை மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகி மணி நியாயப்படுத்தி இருந்தார். இது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் கண்ணூரைச் சேர்ந்த அப்துல்சுக்கூர் என்பவர் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து விலகி முஸ்லிம் லீக்கில் இணைந்தார். இந்த நிலையில் ரயிலில் பயணம் செய்த சுக்கூர், கீழராவு என்ற இடத்தில் கடந்த பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலையின் பின்னணியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் இருப்பதாக சுக்கூர் குடும்பத்தினர் புகார் கொடுத்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து கண்ணூர் மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெயராஜனிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜெயராஜன் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு 38-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் மார்க்சிஸ்ட் கட்சியினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் வன்முறைக் கும்பலை கலைத்தனர்.
இந்நிலையில் இன்று மாநிலம் முழுவதும் முழு அடைப்புக்கு மார்க்சிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருக்கிறது. இதனால் திருவனந்தபுரம் உட்பட மாநிலம் முழுவதும் பேருந்துகள் ஓடவில்லை. கடைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. இன்றைய அரசு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வட கர்நாடக பகுதிகளில் மத்திய படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து கேரளா செல்லும் அனைத்துப் பேருந்துகளும் எல்லையிலேயே நிறுத்தப்பட்டிருக்கின்றன. கேரளாவில் இருந்து தமிழகத்துக்கான போக்குவரத்தும் முடங்கியது.