எங்களை விரட்ட முயன்றால்.. மத்திய அரசு, டெல்லி போலீசுக்கு ஹசாரே மிரட்டல்
டெல்லி: ஊழலுக்கு எதிராகவும், வலுவான லோக்பால் மசோதா வேண்டியும் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் எங்கள் குழுவினர் வலுக்கட்டாயமாக விரட்ட போலீசார் முயன்றால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று அன்னா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊழலுக்கு எதிராகவும், வலுவான லோக்பால் மசோதா வேண்டியும் அன்னா குழுவினர் கடந்த 25ம் தேதி முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அன்னா ஹசாரேவும் கடந்த 29ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 9 நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா குழு உறுப்பினர்களான அரவிந்த் கெஜ்ரிவால், கோபால் ராய் மற்றும் மனீஷ் சிசோடியா ஆகியோரின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
இந்நிலையில் கெஜ்ரிவால், கோபால் ராய், சிசோடியாவை உடனே உண்ணாவிரதத்தை கைவிடக் கோரியும், மருத்துவமனையில் அனுமதிக்கக் கோரியும் போலீசார் அன்னாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது,
மருத்துவர்கள் அறிவுறுத்தியபடி கெஜ்ரிவால், மனீஷ் சிசோடியா, கோபால் ராய் ஆகிய மூவரையும் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். இல்லையேல் ஜந்தர் மந்தரில் நடைபெறும் எதிர்பாரா சம்பவங்களுக்கு நீங்களே பொறுப்பாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தை படித்துப் பார்த்த ஹசாரே தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் கூறுகையில், தானாக விரும்பி போராட்டம் நடத்தும் எங்கள் குழுவினரை வலுக்கட்டாயமாக வெளியேற்ற போலீசார் முயற்சிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் பின் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்றார்.
இந்நிலையில் லோக்பால் மசோதாவை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும், மசோதாவை நிறைவேற்றாத வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இத்தனை நடந்தும் அரசு தரப்பில் எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.