வேலூரில் லாரி மீது கார் மோதி விபத்து-3 என்ஜினீயரிங் மாணவர்கள் பலி
வேலூர்: வேலூரில் என்ஜினீயரிங் மாணவர்கள் சென்ற கார், சாலையோரம் நின்ற லாரியின் மோதி விபத்தில் சிக்கியது. இதில் காரில் இருந்த 3 என்ஜினீயரிங் மாணவர்கள் பலியாகினர். மேலும் 2 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேலூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் படித்து வந்த மாணவர்கள் ராஜிசோலங்கி, தலூர்தா ரெட்டி, மாருதி, மணிகண்டன், ஜெயசங்கர் ஆகியோர். இவர்கள் 5 பேரும் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தனர்.
இந்த நிலையில் ராஜிசோலங்கியை காண அவரது நண்பர் ஒருவர் வந்தார். அவரை காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து அழைத்து வருவதற்காக, ராஜிசேலங்கி, மாருதி, மணிகண்டன் உட்பட 5 பேரும் ஒரு காரில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு சென்றனர்.
சித்தூர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, காரின் கட்டுப்பாடு இழந்து, தறிகெட்டு ஓடியது. இதில் சாலையின் எதிரே நின்ற ஒரு லாரியின் மீது கார் மோதி நின்றது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது.
விபத்தின் போது ஏற்பட்ட சத்தம் கேட்டு அப்பகுதியினர் வந்து இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களை மீட்டனர். அப்போது காரின் இடிபாடுகளில் சிக்கிய ராஜிசோலங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தில் படுகாயமடைந்த மாருதி, மணிகண்டன், ஜெயசங்கர், தலூர்தா ரெட்டி ஆகியோர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் மாணவர் மாருதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தலூர்தா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். ஜெயசங்கர், மணிகண்டன் ஆகியோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.