குடிவெறியில் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையைக் கொன்ற மகள் மீதான வழக்கு தள்ளுபடி
சென்னை: சென்னை அருகே குடிவெறியில், பெற்ற மகளைப் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையைக் கொன்றதைத் தொடர்ந்து மகள் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
தன்மானத்தைக் காக்க ஒரு பெண் எதையும் செய்யலாம் என்று கூறிய மகாத்மா காந்தியடிகளின் வாக்கை அடிப்படையாக வைத்து இந்த உத்தரவைப் பிறப்பிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
சென்னை, மாங்காடு அருகே உள்ள கோவூரைச் சேர்ந்தவர் அனூஜ் ஜெர்மி. 19 வயதான இவர் தனது தந்தை மற்றும் தம்பியுடன் வசித்து வந்தார். தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்தார்.
கடந்த மே மாதம் 17-ந்தேதி அனூஜ் ஜெர்மி வீட்டில் தனியாக இருந்தபோது அவரது தந்தை குடிபோதையில் வந்து தவறாக நடக்க முயன்றார். எவ்வளவோ தடுத்தும் கற்பழிக்க முயன்றார். இதனால் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக அவரது தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்தார் ஜெர்மி.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதேசமயம், காமவெறி பிடித்த தந்தையைக் கொன்ற காரணத்தால், மாணவி கைது செய்யப்படவில்லை. மேலும் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெர்மி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து, இளம்பெண் அனூஜ் ஜெர்மி தனது கற்பையும், தன்னையும் காத்து கொள்வதற்காக தனது தந்தையை சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கொலை செய்துள்ளார்.
ஒரு பெண் தன்னையும் தன்மானத்தையும் காப்பாற்றி கொள்வதற்காக இதுபோல் நடந்து கொள்வதில் தவறு இல்லை என்று மகாத்மா காந்தியே எழுதி உள்ளார். எனவே அனூஜ் ஜெர்மி மீது தொடரப்பட்ட கொலை வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.
இதில் முறையாக விசாரணை நடத்தி வழக்குபதிவு செய்த போலீஸ் அதிகாரி அழகுக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவிக்கிறது என்று தீர்ப்பளித்தார்.