இன்போசிஸ் அலுவலக மாடியிலிருந்து விழுந்து பெண் பலி- 3 சாப்ட்வேர் என்ஜினியர்கள் கைதா?
ஆனால், இதை ஹைதராபாத் நகர துணை போலீஸ் கமிஷ்னர் மறுத்துள்ளார்.
நீலிமா யெருவா (27) என்ற இன்போசிஸ் ஊழியர் இரு தினங்களுக்கு முன் ஹைதராபாத் கச்சிபெளலி பகுதியில் உள்ள இன்போசிஸ் அலுவலகத்தின் மாடியில் கார் பார்க்கிங் பகுதியில் இருந்து கீழே விழுந்து அந்த இடத்திலேயே இறந்தார்.
முதலில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால், இது கொலையாக இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் புகார் கொடுத்ததையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திருமணமாகி 2 குழந்தைகளுக்குத் தாயான நிலிமா ஹைதராபாத்தில் 2 பெட்ரூம் வீட்டில் வசித்து வந்தார். இவரது குடும்பத்தினர் குகட்பள்ளியில் வசித்து வருகின்றனர்.
நிலிமா தனது ஹைதராபாத் வீட்டின் ஒரு பெட்ரூமை அவர் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் இன்னொரு பெண்ணுக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.
அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் 5 மாதங்களுக்கு முன் அலுவலக வேலையாக சென்றிருந்த அவர் 5 நாட்களுக்கு முன்னரே ஹைதராபாத் திரும்பினார். இந் நிலையில் வீட்டின் இன்னொரு பெட்ரூம் பகுதியையும் வாடகைக்கு விடுவதாக அவர் விளம்பரம் தந்திருந்தார்.
அவர் திரும்பவும் அமெரிக்கா செல்லவோ அல்லது வேறிடம் செல்லவோ திட்டமிட்டிருந்தாரா என்பது தெரியவில்லை.
இந் நிலையில் தான் அலுவலக மாடியிலிருந்து விழுந்து இறந்தார். காரில் வராத நீலிமா எதற்காக மாடியில் உள்ள கார் பார்க்கிங் பகுதிக்குச் சென்றார் என்பது சந்தேகத்தை எழுப்பியது.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் இப்போது 3 சாப்ட்வேர் என்ஜினியர்களை கைது செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஆனால், இதை போலீசார் மறுத்துள்ளனர்.
அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவான விவரத்தை ஆய்வு செய்து வருகிறோம் என்று மட்டுமே போலீசார் தெரிவித்துள்ளனர்.