ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி!
இது குறித்து திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், கட்சியின் கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் தலைவருமான கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வரும் ஆகஸ்ட் 12ம் தேதி சென்னையில் டெசோ அமைப்பின் சார்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டை திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கூட்டியுள்ளார். இலங்கையில் சிங்களவர்களின் ஆதிக்க வெறியினால் ஏற்பட்ட கலவரங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் காயங்களுக்கும், அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப துயரங்களுக்கும் மருந்து போடும் மாநாடு இது.
இந்த மாநாடே நடைபெறாது, தடை போடப்படும் என்று எதிரிகள் கண்ட கனவு தூள் தூளாக போகிறது. வெளிநாட்டில் இருந்து இந்த மாநாட்டிற்கு வருகை தந்து சிறப்பிக்கப் புறப்பட்ட தலைவர்களுக்கு ஒரு சிலர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இல்லாதை, பொல்லாததையும் கூறி, அவர்களின் வருகையை தடுக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகிப் போனதை மெய்ப்பிக்கும் மாநாடு இது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டியது நம் ஒவ்வொரின் கடமை. ஆட்சிப் பீடத்திலே இருப்போர் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கும் போது, ஈழத்தமிழர்கள் கண்ணீரை துடைப்பதற்காக இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி இந்த நேரத்திலும் நம்மால் முடிந்த அளவிற்கு ஈழத்தமிழர்களின் வாழ்வில் எப்படியாவது நிம்மதியைத் தேடித்தர முடியாதா என்றெண்ணியே இந்த மாநாட்டை கூட்டியுள்ளார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வது தமிழனாக பிறந்த ஒவ்வொருவரின் கடமை என்ற உணர்வோடு ஆகஸ்ட் 12ம் தேதி கூடும் "ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு'' வெற்றி பெற சென்னையிலே திரண்டி வாரீர் என்று அந்த அறிக்கையில் தெரிவி்த்துள்ளார்.