ஒபாமா எப்படி அப்படி போஸ் கொடுக்கலாம்: துருக்கியர்கள் ஆவேசம்
வாஷிங்டன்: துருக்கி பிரதமர் தைய்யிப் எர்டோகனுடன் தொலைபேசியில் பேசும்போது அமெரிக்க அதிபர் ஒபாமா இடக்கையில் போனையும், வலக்கையில் பேஸ்பால் மட்டையையும் பிடித்துள்ளவாறு வெளியான புகைப்படம் துரிக்கியர்கள் ஆத்திரமடைய வைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அமர்ந்து துருக்கி பிரதமர் தைய்யிப் எர்டோகனிடம் சிரியா பிரச்சனை குறித்து தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் இடக்கையில் போன் ரிசீவரையும், வலக்கையில் பேஸ்பால் மட்டையையும் பிடித்துக் கொண்டு பேசியுள்ளார். இதை ஒபாமாவின் விளம்பரக் குழு புகைப்படம் எடுத்து அமெரிக்க-துருக்கிய உறவு மேம்படும் என்ற எண்ணத்தில் வெளியிட்டது.
ஆனால் அதற்கு நேர்மாறாக இருக்கும் உறவும் சிக்கலாகிவிட்டது.
துருக்கியின் குடியரசு மக்கள் கட்சியைச் சேர்ந்த தலைவர் மெதின் லுட்பி பைதர் கூறுகையில், நாட்டை ஆள எங்கள் பிரதமர் யாரிடம் இருந்து உத்தரவுகளைப் பெறுகிறார் என்பதை அந்த புகைப்படம் வெளிப்படுத்துகிறது என்றார்.
இந்த புகைப்படம் துருக்கி மற்றும் அதன் குடிமக்களுக்கு பெருத்த அவமதிப்பாகும் என்று துருக்கிய தலைவர் உமுத் ஒரான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கெய்ட்லின் ஹேடன் கூறுகையில்,
துருக்கி பிரதமருடன் ஒபாமாவுக்கு உள்ள நட்பை வெளிப்படுத்தவும், சிரியா விவகாரம் குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேசியதை தெரிவிக்கவே இந்த புகைப்படத்தை வெளியிட்டோம். ஆனால் அது வேறு விதமாகிவிட்டது என்றார்.