யாத்திரை.. இந்துக்களில் 500 பேருக்கு மட்டும் நிதி உதவி என்பது மிகமிகக் குறைவு: ராம கோபாலன்
சென்னை: இந்துக்கள் புனித யாத்திரை செல்ல நிதி உதவி வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை செல்ல பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு நிதி உதவி அளிக்கின்றன. இந்த ஆண்டும் கூட தமிழகத்தில் இருந்து ஹஜ் செல்ல விண்ணப்பித்த அனைவரையும் மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
அதே சமயம் இந்துக்களில் 500 பேருக்கு இந்த நிதி உதவி என்பது மிகமிகக் குறைவு. இதிலும் முதல் அமைச்சர் மக்கள் தொகைக்கு ஏற்ப யாத்திரைக்கு நிதி உதவி எண்ணிக்கையை அதிகப்படுத்திட வேண்டும். இந்து முன்னணியின் கோரிக்கையை ஏற்று கைலாஷ் யாத்திரைக்கும், முக்திநாத் யாத்திரைக்கும் நிதி உதவி அளிக்கப்படும் என்று அறிவித்து நிதி ஒதுக்கிய தமிழக முதலமைச்சரை பாராட்டுகிறோம். மக்கள் தொகைக்கு ஏற்ப யாத்திரைக்கு பயனாளிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும்.
தமிழகம் ஆன்மீக பூமி. தமிழகத்தில் ஏராளமான புராதனமான கோவில்கள் பல்லாயிரம் ஆண்டுகள் புகழ் பெற்று விளங்கி வருகிறது. இவற்றுக்கு பக்தர்கள் சென்று தரிசனம் செய்ய குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதிகள், உணவுடன் கூடிய பயண ஏற்பாட்டை பேக்கேஜாக செய்து தர முன் வரவேண்டும்.
சாதாரண மக்களும் இந்த தலங்களுக்கு சென்று வழிபட இது வாய்ப்பாக அமையும். இதனை தமிழக அரசும், சுற்றுலா துறையும் சேர்ந்து ஏற்பாடு செய்தால் வெளி மாநிலத்தவர்களும், வெளிநாட்டினரும் ஏராளமாக வருவார்கள்.
இதனால் தமிழகத்தின் சிறப்பு பரவும். தமிழக நகரங்களின் வருவாயும் பெருகும். கைவினைப் பொருட்களின் வர்த்தகமும் பெருகும். கைலாய யாத்திரை, முக்திநாத் யாத்திரை போக இயலாதவர்கள் இந்த நல்ல வாய்ப்பால் திருப்தி அடைவார்கள் என்று கூறியுள்ளார் ராம கோபாலன்.