தூத்துக்குடி மாநகராட்சி ஆண்டு விழாவை மறந்த மேயர், கவுன்சிலர்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி ஆண்டு விழாவை நடத்த மேயர் மற்றும் கவுன்சிலர்கள் மறந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தூத்துக்குடி நகராட்சி 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி முதல் மாநகராட்சியாக மாற்றப்பட்டது. புதிய மாநகராட்சியை அப்போதைய முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் துவங்கி வைத்தனர். மாநகராட்சியின் புதிய கட்டிடத்திற்காக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து நகராட்சியாக இருக்கையில் 51 வார்டுகளாக இருந்தது 60 வார்டுகளாக்கப்பட்டது. மேலும் தூத்துக்குடி ரூரல், மீளவிட்டான், அத்திமரப்பட்டி உள்ளிட்ட 5 கிராம பஞ்சாயத்துகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
மாநகராட்சியி்ன் புதிய கமிஷனராக ஐ.ஏ.எஸ். அதிகாரி மதுமதி பொறுப்பேற்றார். இந்நிலையில் தி்முக ஆட்சியின்போது மாநகராட்சி உதயமான நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகம் அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. விழாவில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சியான பிறகு 2012ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் அதி்முகவைச் சேர்ந்த சசிகலா புஷ்பா மேயர் ஆனார். மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் அவர் என்பதால் இந்த ஆண்டு மாநகராட்சி உதயதின கொண்டாட்டம் சிறப்பாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் கடந்த 5ம் தேதி மாநகராட்சி ஆண்டு விழா கொண்டாடப்படவில்லை.
இவ்வாறு விழா கொண்டாட வேண்டும் என்பதை அதிகாரிகள் மேயரின் கவனத்திற்கு கொணடு செல்லவில்லை.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,
ஒருவேளை திமுக ஆட்சியில் தூத்துக்குடியின் அந்தஸ்து உயர்த்தப்பட்டதால் நாம் ஏன் கொண்டாட வேண்டும் என நினைக்கிறார்களோ என்று தெரியவில்லை. ஆனால் தனி நபர்களை விட ஜனநாயக அமைப்பு பெரியது. மாநகராட்சியின் ஆண்டு விழாவை நடத்தியிருக்க வேண்டும் என்றனர்.