ஏய்... தாமரை ஓடாத புள்ள நில்லு... போலீஸாரை மூச்சிறைக்க ஓட விட்ட மோப்ப நாய்!
ஈரோடு: திருடர்களைப் பிடிக்க போலீஸார் ஓடியதை பார்த்திருக்கிறோம், போலீஸாரை துரத்திக் கொண்டு ரவுடிகள் விரட்டுவதை சினிமால் பார்த்திருக்கிறோம். ஆனால் தப்பி ஓடிய நாயை விரட்டிக் கொண்டு போலீஸார் ஓடியதைப் பார்த்திருக்கிறீர்களா...ஈரோடு எஸ்.பி. அலுவலக வளாகத்தில் அந்தக் 'கண்காட்சி'யை ஏராளமான மக்கள் திரண்டு வந்து பார்த்து ஆச்சரியப்பட்டனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மோப்ப நாய்ப் படைப் பிரிவு உண்டு. ஈரோடு எஸ்.பி. அலுவலக வளாகத்தில் அதேபோல ஒரு மோப்ப நாய் பிரிவு உள்ளு. அங்கு தாமரை, விக்கி, ராக்கி என மூன்று நாய்கள் உள்ளன. இதில் தாமரை ஜெர்மன் ஷெப்பர்ட் நாயாகும். ராக்கி டாபர்மேன் குடும்பம், விக்கி லேபர் டாக்.
இதில் தாமரை வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கக் கூடிய சிறப்புப் பயிற்சி பெற்றதாகும். மற்ற இரு நாய்களும் குற்ற வழக்குகளில் பணியாற்றி வருகின்றன.
இந்த மூன்று நாய்களுக்கும் எஸ்.பி. அலுவலக வளாகத்திலேயே தனியாக 'வீடு' கொடுத்திருக்கிறார்கள். பணி நேரம் போக மற்ற நேரங்களில் இந்த கூண்டுக்குள்தான் இவை தங்கி ஓய்வெடுக்கும்.
இந்த நிலையில் நேற்று காலை தாமரைக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. அப்போது திடீரென தாமரை போலீஸாரின் பிடியிலிருந்து தப்பி வெளியே ஓடியது. இதைப் பார்த்துப் பதறிப் போன போலீஸார் நாயைப் பிடிக்க பின்னாலேயே ஓடினர். எஸ்.பி. அலுவலக வளாகத்திற்குள் அங்குமிங்குமாக ஓடிய நாய், பின்னர் வெளியே பாய்ந்தது. மகளிர் காவல் நிலையத்திற்குள் புகுந்து வெளியேறியது. பின்னர் காந்திஜி சாலையில் ஓடத் தொடங்கியது.
தாமரையைப் பிடிக்க பயிற்சியாளரும், பிற காவலர்களும் மூச்சிறைக்க இறைக்க ஓடியதைப் பார்த்து பொதுமக்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பரபரப்புடன் வேடிக்கை பார்த்தனர். சாலை நெடுகிலும் காவலர்களை ஓட விட்டு டிரில் வாங்கிய தாமரை நாய், பின்னர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்குள் புக முயன்றது. ஆனால் கேட்டுக்குள் நுழைய முடியாமல் திணறியது. அதற்குள் பாய்ந்து வந்த போலீஸார் தாமரையை அமுக்கிப் பிடித்து விட்டனர்.
வழக்கமாக ஓடிப் போகும் திருடர்களைப் பிடித்தால் காவல் நிலையத்தில் செம சாத்துப்படி கிடைக்கும். ஆனால் தாமரை நாயாச்சே.. அதனால் அப்படி எதுவும் நடந்திருக்காது என்று நம்பலாம்.