டெசோவுக்கு அனுமதி மறுப்பு ஏன்? - போலீஸ் விளக்கம்
டெசோ மாநாட்டுக்கு அனுமதி மறுத்தது தொடர்பாக போலீஸ் இணை கமிஷனர் சேஷசாயி கூறியுள்ளதாவது:
டெசோ மாநாடு நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது போல சுமார் 1 லட்சம் பேர் அமர்வதற்கு இடம் இல்லை. இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
மாநாட்டு பந்தலுக்குள் செல்வதற்கும் வெளியில் வருவதற்கும் ஒரே ஒரு வாசல் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு நடக்கும் போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு, ஒட்டு மொத்தமாக வெளியில் வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அசம்பாவித சம்பவம் ஏற்படும்.
மேலும் மாநாடு நடைபெறும் இடத்துக்கு அருகே அரசு மருத்துவமனை உள்ளது. மாநாட்டுக்கு வரும் வாகனங்களால் அந்த பகுதியில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
அதிகம் பேர் மாநாட்டில் கலந்து கொள்ள வந்தால் வாகனங்களை நிறுத்தும் வசதியும் இல்லை.
மாநாட்டு கூட்டத்தை பயன்படுத்தி விடுதலைப் புலிகள் மற்றும் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளது.
இதற்கிடையே ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்டுள்ள கடிதத்தில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டுக்கு அனுமதி தருமாறு கேட்டுள்ளனர்.
இதுபோன்ற காரணங்களால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.