ஈமு கோழிகளைக் காப்பாற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு டாக்டர் சேதுராமன் பாரட்டு
மதுரை: ஈமு கோழிகளைக் காப்பாற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு மூவேந்தர் முன்னணிக் கழகம் பாராட்டுத் தெரிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் டாக்டர் சேதுராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் மருத்துவ குணமுள்ள ஈமு கோழிகள் வளர்க்கப்படுகின்றன. ஆடு, கோழி இவற்றிலுள்ள சத்துக்களைவிட கூடுதலான சத்துக்கள் நிறைந்தது ஈமு கோழிகள் என்பது உலகம் எங்கும் நிரூபிக்கப்பட்டுள்ள மருத்துவ உண்மை. ஈமு கோழிகள் மூலமாக உணவுப் பொருளாகவும், மருத்துவ ரீதியாக பயன்படுத்தக்கூடிய ஈழு ஆயில் போன்றவையும் இந்தப் பண்ணைகள் மூலமாக தமிழக மக்களுக்கு கிடைத்து வந்தது.
கடந்த சில வாரங்களாக சில ஈமு கோழி பண்ணை முதலீட்டாளர்கள் செய்த தவறுகளால் பல ஆயிரம் கோடி, சிலருக்கு இழப்பு ஏற்பட்டிருந்தாலும் பண்ணை கோழிகள் பராமரிப்பினை முதலாளிகள் செயல்படுத்தாத காரணத்தால் நாளொன்றுக்கு 100 முதல் 300 கோழிகள் வரை உயிரிழந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.
கால்நடை வளர்ப்புத்துறையில் அதிக கவனம் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதா ஏழை மக்களுக்காக இலவச ஆடு, இலவச கோழி வளர்ப்புத் திட்டங்களை கடந்த ஓராண்டில் அமல்படுத்தியவர். ஈமு கோழிகள் வளர்ப்புப் பண்ணைகள் இப்போது அரசின் கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கிறது. சரியான தீவன பராமரிப்பு இன்றி ஈமு கோழிகள் உயிரிழப்பதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுத்ததை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம். குறிப்பாக கால்நடைத்துறை இதில் கூடுதல் கவனம் செலுத்தி ஈமு கோழிகளின் உயிரினை காப்பாற்ற அவற்றை ஹைதராபாத்திலுள்ள தனியார் ஈமு பண்ணைகளுக்கு உடனடியாக கொண்டு செல்ல பேச்சுவார்த்தை நடத்தி வருவது வரவேற்கத்தக்கது. ஈமு கோழிகளின் உயிரினை காப்பாற்றுவதற்கு 150 டன் தீவனத்தை அரசு கொள்முதல் செய்துள்ளதும் வரவேற்கத்தக்கது. பசியால் தவித்த ஈமு கோழிகளை காப்பாற்றிய முதல்வருக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.