இலங்கை அரசின் பொய்யை நம்பி நான் உண்ணாவிரதத்தை கைவிட்டேன்-கருணாநிதி
சென்னையில் டெசோ மாநாட்டை முன்னிட்டு ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு ஆய்வரங்கத்தை இன்று காலை தொடங்கி வைத்து கருணாநிதி பேசியதாவது:
இலங்கையில் போருக்கு முன்பும், போருக்கு பின்பும் நடைபெற்று வரும் நிகழ்வுகளை கண்டு உலக நாடுகள் மிகவும் கவலை அடைந்துள்ளன. ஈழத்தமிழர்களின் பிரச்சினையானது மனிதாபிமானம், மனித உரிமைகள், சுயமரியாதை தொடர்புடையது, பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அதிகப்படியாக தாமதம் செய்வது, மேலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். தம், மொழி, கலாச்சாரம் இவற்றின் பெயரால் அடக்கு முறைகள் நடைபெற அனுமதிக்க கூடாது.
அன்றைய டெசோ
1986-ம் ஆண்டு மே மாதம் 4-ந்தேதி மதுரையில் டெசோ' சார்பில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் வாஜ்பாய், என்.டி.ராமராவ், பகுகுணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனைத்து ஈழத் தமிழ் மற்றும் போராளி குழுக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். ஈழத்தமிழர் பிரச்சினையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக உறுதியான மற்றும் உணர்வுப்பூர்வமான ஆதரவை தி.மு.க. அளித்து வருகிறது. தொடர்ந்து அவர்களுக்கு எப்போதும் உறுதணையாக இருப்போம்.
திமுகவின் தியாகம்
1983-ல் ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நானும், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்தோம். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு அளித்ததற்காக 2 முறை தி.மு.க. ஆட்சி டிஸ்மிஸ்' செய்யப்பட்டது.
உண்ணாவிரதம்- ஏமாற்றிய இலங்கை
ஈழத்தில் இறுதிப் போரின்போது ரத்தம் சிந்துவதை எதிர்த்தும், இந்தியா தலையிட கோரியும், அண்ணா நினைவிடத்தில் 27.4.2009 அன்று சாகும்வரை தொடங்கினேன். இலங்கை அரசு மற்றும் இந்திய வெளியுறவு துறை உத்தரவாதம் அளித்து, அதன் நகல் எனக்கு அனுப்பப் பட்டது. போர் முடிவுக்கு வந்ததாக நினைத்து உண்ணாவிரதத்தை நான் முடித்துக் கொண்டேன். ஆனால் இலங்கை அரசு இந்தியாவை ஏமாற்றி விட்டது.
அற்புதமான தியாகங்கள்
இலங்கையில் போருக்கு முன்பும், போருக்கு பின்பும் தமிழர்கள் இரண்டாந்தார குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு சட்ட உரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஈழத்தமிழர்கள் புரிந்த தியாகங்கள், அற்புதமானவை. அவர்கள் அனுபவித்த சித்ரவதைகளும், அடக்கு முறைகளும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதவை.
தமிழர்களின் அன்றாட வாழ்வில் திட்டமிடப்பட சிங்களமயமாக்கல்' எவ்வாறு நடைபெற்று வருகின்றன என்பதையும் தமிழர்கள் மீது ஏவப்படும் சட்டமீறல்களையும் கொடுமையான இடைïறுகளையும் இவை தெளிவுப்படுகின்றன. தமிழர்கள், தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான பாதையில் முட்புதர்களும், புதைகுழிகளும் நிறைந்துள்ளதை இவை காட்டுகின்றன.
அவசர நிலையும் அடக்குமுறையும்
தமிழர்களின் வசிப்பிடங்களில் அவசர நிலை அமலில் உள்ளது போன்ற நிலைமையை இலங்கை ராணுவம் உருவாக்கி வருவது வேதனை அளிக்கத்தக்கது.ஜெனீவாவில் இயற்றப்பட்ட தீர்மானத்துக்கு பிறகும் இவை மேலும் அதிகரித்துள்ளது.
குறுகிய கால - நீண்டகால தீர்வு
போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு மீள் குடியமர்வு, நிவாரணம், புணர்வாழ்வு ஆகியவற்றுக்காக அவசர தீர்வு காணப்பட வேண்டும். இடைக்கால தீர்வாக உள் கட்டமைப்பு மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தமிழர்கள் நிம்மதியாக வாழவகை செய்ய வேண்டும். சொத்துரிமை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இதர ஜனநாயக உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும். அகதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் இதில் அடங்கும். நிரந்தர தீர்வாக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வரும் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்றார் அவர்.