சட்டசபையில் விஜயகாந்த் ஏன் கோபப்பட்டார் தெரியுமா...?
தஞ்சையில் நடந்த விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
தஞ்சையில், 12 மணி நேரம் விவசாயத்துக்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம், குறைந்த மின் அழுத்தமாக இருப்பதால், மின் மோட்டார்கள் வெடித்து விடுகிறது என, விவசாயிகள் கூறுகின்றனர். அதனால், தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். குறுவை சாகுபடி பாதித்து, சம்பா சாகுபடி கேள்விக்குறியாகி விட்டது. எனவே, ஏக்கருக்கு விவசாயிகளுக்கு, 12 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு, அரசு வழங்க வேண்டும்.
தமிழகத்தில், நதிநீர் பிரச்னை, தண்ணீர் பிரச்னை நிலவுவதற்கு காரணம், முதல்வர் ஜெயலலிதாதான். கவுரவம் பார்க்காமல், அண்டை மாநிலங்களான கேரள, கர்நாடக முதல்வர்களை, தமிழக முதல்வர் சென்று சந்தித்திருந்தால், தண்ணீர் பிரச்னை தீர்ந்திருக்கும்.
மின்சார பிரச்னையை தீர்க்க முடியவில்லை. பஸ் பாஸ், மாணவ, மாணவியருக்கு யூனிபார்ம் வழங்க முடியவில்லை. தமிழகத்தில் நிலவும் உரத்தட்டுப்பாட்டை போக்க, மத்திய அமைச்சர் அழகிரி பேசவே பயப்படுகிறார். பதவி போய்விடும் என அவர் அஞ்சுகிறார்.
தமிழகம் முழுவதும் ஆறுகளில் மணல் அள்ளுவதை அடியோடு தடை செய்ய வேண்டும்.
இந்த கூட்டத்துக்காக வைத்த பேனரில், கோட்டையை தானமாக கொடுத்தேன் என குறிப்பிட்டதால், கலெக்டர் பேனரை அகற்றக்கூறியுள்ளார். வார்த்தைக்கு பவர் இருக்கிறது என்றால், நான் பேசினால் யாரும் தாங்க முடியாது.
மதுரையில், 16 ஆயிரம் கோடி கிரானைட் குவாரி முறைகேடு நடந்துள்ளது என்கின்றனர். இதேபோல, தமிழகம் முழுவதும், 175 குவாரிகள் உள்ளது. இந்த குவாரிகளை அரசே ஏற்று நடத்தினாலும், கொள்ளை தான் நடக்கும். குவாரி முறைகேடு குறித்து, உடனடியாக, அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார் அவர்.