மாவோயிஸ்ட் அமைப்பில் பிளவு: நீக்கப்பட்ட ஒடிஷா மாநிலத் தலைவர் பாண்டா சரணடைகிறார்?
புவனேஸ்வர்:மாவோயிஸ்ட் அமைப்பில் இருந்து சில நாட்களுக்கு முன்பு க்கப்பட்ட ஒடிஷா மாநில தலைவர் சபயசாசி பாண்டே சரணடையக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் யுத்தக் குழுவாக ஆந்திர மாநிலத்தில் செய்பட்ட நக்சலைட்டுகள் இதர மாநிலங்களில் செயல்பட்ட மாவோயிஸ்டுகளுடன் இணைந்து சிபிஐ- மாவோயிஸ்ட் என்ற புதிய அமைப்பாக உருவெடுத்தனர். இதனால் மாவோயிஸ்டுகள் கை பல மாநிலங்களில் வலுவாக ஓங்கியிருந்தது. இருப்பினும் ஆந்திர மாநில மக்கள் யுத்தக் குழுவினருக்கும் இதர மாநில மாவோயிஸ்டுகளுக்கும் குறிப்பாக ஒடிஷா மாநில குழுவினருக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வந்தது. அண்மையில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இத்தாலிய பயணிகள் மற்றும் எம்.எல்.ஏ. கடத்தல் ஆகிய சம்பவங்களின் போது இந்த மோதல் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்நிலையில் சபயசாசி பாண்டேவை அமைப்பிலிருந்து நீக்குவதாக மாவோயிஸ்ட் அமைப்பு கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்கு பதிலளித்து ஞாயிற்றுக்கிழமை இரவு சபயசாசி பாண்டே ஆடியோ டேப் ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதில் தாமும் தமது ஆதரவாளர்களும் ஏழு மாதங்களுக்கு முன்பே சிபிஐ - மாவோயிஸ்ட் அமைப்புடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டதாகவும் அதன் பின்னர் ஒடிஷா மாவோவாதி கட்சி என்ற அமைப்பை தனியே நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த ஆடியோ டேப்பில் சபயசாசி பாண்டே கூறியுள்ளதாவது:
மாவோயிஸ்டுகள் பழங்குடி இனத்தவருக்கு எதிராக, சிறுபான்மையினத்தவருக்கு எதிரா, பொதுமக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். தனிநபர்களை எந்தவித காரணமின்றி அவர்கள் அழித்தொழிப்பதை ஏற்க முடியாது. மாவோயிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான மனோஜ் என்ற மோதெம் பாலகிருஷ்ணாதான் அத்தனை பிரச்சனைகளுக்குமே காரணம். அவர்தான் ஒடிஷா மாநில போராளிகளுக்கு எதிராக ஏற்க முடியாத பல கட்டளைகளைத் திணித்தார்.
இதேபோல் இதர கம்யூனிஸ்ட் அமைப்புகளான எஸ்யூசி ஐ, சிஐடியூ, சிபிஎம்- எம்.எல். போன்ற அமைப்பினரையும் காரணமின்றி மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்கின்றனர். இந்த நடவடிக்கையை நாங்கள் விமர்சிக்கிறோம். மாவோயிஸ்ட் அமைப்பில் நாங்கள் கொத்தடிமைகளாக இருக்க விரும்பவில்லை. உட்கட்சி ஜனநாயகம் என்பது அவசியமானது.
எந்த பன்னாட்டு நிறுவனங்கள் பழங்குடி மக்களை அவர்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றுகின்றனவோ அதே நிறுவனங்களிடம் பெருமளவு பணத்தை மாவோயிஸ்டுகள் வசூலிக்கின்றனர். இது கட்சி முடிவுகளுக்கு எதிரானது. இத்தகைய போக்கினால்தான் நாங்கள் மாவோயிஸ்ட் அமைப்பிலிருந்து வெளியேற முடிவு செய்தோம். எங்களை இப்போது நீக்குவதாக அவர்கல் அறிவித்திருக்கின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கட்சியின் தவறான போக்குகளை சுட்டிக்காட்ட தொடங்கிய போது கட்சி என்னை "காவலில்" வைத்தது. 3 மாத காலமாக கட்சியின் காவலில் வைக்கப்பட்டிருந்தேன்.
இப்பொழுதும் சொல்கிறோம். மாவோயிஸ்ட் போராளிகளுடன் நாங்கள் ஒருபோதும் ஆயுத மோதலில் ஈடுபட மாட்டோம். ஒடிஷா மாநிலத்தின் கஞ்சம், கஜபதி, ராயகடா, கந்தமால் மாவட்டங்களில் தொடர்ந்தும் நாங்கள் பழங்குடி மக்களுக்காக ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுவோம் என்று அதில் பாண்டா கூறியுள்ளார்.
இதனிடையே பாண்டா, ஆயுதப் போராட்டத்தை முழுமையாகக் கைவிட்டுவிட்டு வெகுஜன அரசியல் பாதைக்கு திரும்பக் கூடும் என்று சில தகவல்கள் கூறுகின்றன. அவர் தற்போது தொடர்ந்தும் தனி ஆயுதப் போராட்டக் குழுவை நடத்துவதால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக தனது ஆடியோ செய்தியில் பாண்டா எதனையும் குறிப்பிடவில்லை.