பொதுமக்களை அலைக்கழிக்கும் மின்வாரியத் துறை ஊழியர்கள்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் காலதாமதமாக மின்கட்டணம் செலுத்தவரும் பொதுமக்களிடம் அபராத தொகை வசூலிப்பதுடன், அவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சங்கரன்கோவில் மின்வாரிய கோட்டத்திற்குகீழ் நகர்புறம் 1, நகர்புறம் 2, கிராமப்புறம் குருக்கள்பட்டி, திருவேங்கடம், பெருமாள்பட்டி, கலிங்கப்பட்டி, பழங்கோட்டை, குருவிகுளம் உள்ளிட்ட 10 மின் நிலையங்களின் மூலம் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக அனைத்து அலுவலகங்களிலும் கணினி பொறுத்தப்பட்டு வாடிக்கையாளர்களிடம் மின்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
மின்வாரிய கணக்கீட்டாளர்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்கள் குறிப்பிடும் தேதிக்குள் கட்டணத்தை வாடிக்கையாளர் செலுத்த தவறினால் அவரது கட்டணத்துடன் ரூ.60 முதல் மின் இணைப்புக்கு தகுந்தாற்போல் அபராதத் தொகையை சேர்த்து வசூல் செய்ய வேண்டும். கட்டண தமாதத்திற்காக மின் இணைப்பை துண்டிக்கக் கூடாது என்றும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் சங்கரன்கோவில் நகர்புறம் 1ல் உள்ள அலுவலர்கள் வாடிக்கையாளர்கள் மின்கட்டணம் செலுத்த காலதாமதம் ஆனால் மின் இணைப்பை துண்டிப்பதுடன் அவர்களது சர்விஸ் நம்பரை கணிணியில் லாக் செய்து வருகின்றனர்.
இதனால் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு வந்து வாடிக்கையாளர் கட்டணத்தை அபராதத் தொகையுடன் கட்ட முன்வந்தாலும் உங்கள் இணைப்பு லாக் செய்யப்பட்டுள்ளது. அந்த பிரிவு அலுவலரிடம் தெரிவித்து லாக்கை ரிலீஸ் செய்து வாருங்கள் என்று கூறுவதால் பொதுமக்கள் மின்கட்டணத்தை செலுத்த தங்கள் எண்ணை ரீலிஸ் செய்து வர அலைக்கழிக்கப்படுவதாக புகார் கூறப்பட்டுள்ளது.