மும்பை ஐஐடியில் கற்பழிப்பு புகார் சொன்ன மாணவி - மருத்துவ பரிசோதனைக்கு மறுத்து அடம்!
மும்பை: மும்பை ஐஐடியில் கற்பழிப்பு புகார் கொடுத்த பிஹெச்டி மாணவி தம்மை மருத்துவ சோதனைக்குட்படுத்தினால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியிருப்பதால் போலீசார் கை பிசைந்து நிற்கின்றனர்.
மும்பை ஐஐடியில் எம்.எஸ்.சி. படித்துக் கொண்டு பி.ஹெச்.டி.ஆய்வு மேற்கொண்டு வரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவி, தம்மை ஐஐடியில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் வீட்டுக்கு அழைத்து காபியில் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்துவிட்டதாக தமது நண்பர்களிடம் தொலைபேசியில் கூறியிருந்தார். இதையடுத்து அந்த ஊழியரின் படுக்கை அறையில் மீட்கபட்ட அம்மாணவி முதலில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஊழியர் எஸ்.வி. ராஜன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.அவர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில் அந்த மாணவி கூறியுள்ளதாவது:
ஐஐடி ஊழியரான ராஜன், தம்முடன் பாட்மிண்டன் விளையாட வருவார். அப்போதெல்லாம் தமது வீட்டுக்கு வருமாறு தொந்தரவு செய்து கொண்டிருந்தார். இதற்காகவே அவரை தவிர்க்க ஆகஸ்ட் 7,8,9 ஆகிய 3 நாட்களும் பாட்மிண்டன் விளையாட நான் செல்லவில்லை. இதை என் நண்பர்களிடமும் சொல்லியிருக்கேன். அதன் பின்னர் ஆகஸ்ட் 10-ந் தேதி லேபில் என்னை சந்தித்து தமது வீட்டு வருமாறும் தமது மனைவியை அறிமுகப்படுத்தி வைப்பதாகவும் கூறினார்.
இதை நம்பி நானும் அங்கு சென்றேன். ஆனால் அவரது மனைவி அங்கு இல்லை. அப்போது காபியும் பிஸ்கட்டும் அவர் கொடுத்தார். அதை குடித்த சிறிது நேரத்தில் மயங்கிய நிலையில் ராஜனின் படுக்கை அறையில் வீழ்ந்து கிடந்தேன். இதை ஹைதராபாத்தில் உள்ள எனது வருங்கால கணவரிடம் தெரிவித்தேன். அவர் எனது தோழிகளிடம் தெரிவித்து என்னை மீட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில் தம்மிடம் ராஜன் தவறாக நடந்து கொண்டார் என்றாலுல் கற்பழிக்கவில்லை என்றும் இதற்கான மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தினால் தாம் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் அந்த மாணவி எச்சரித்திருக்கிறார். இதையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் போலீசாரும் மருத்துவர்களும் கைபிசைந்து நிற்கின்றனர்.