கறுப்புப் பண விவகாரம்: நாடாளுமன்ற இரு அவைகளிலும் நடவடிக்கைகள் பாதிப்பு

மக்களவையில் திங்கள்கிழமை காலையில் கேள்வி நேரத்தின்போது, கறுப்புப் பணத்துக்கு எதிராக பாபா ராம்தேவ் தில்லியில் நடத்தி வரும் போராட்டம் குறித்து விவாதிக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு தனது நிலையைத் தெரிவிக்க வேண்டும் என்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.
இதேபோல் அசாம் வன்முறையைக் கண்டித்து மும்பையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தச் சம்பவத்தில் உளவுத் துறை செயல்பாடுகளில் ஏற்பட்ட குறைபாடு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிவசேனாவின் ஆனந்த் கீதே தலைமையில் அக்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் மக்களவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் அவை கூடியபோது, பாஜக உறுப்பினர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானில் கட்டாய மத மாற்றத்துக்கு உட்படுத்தப்படும் இந்துக்களின் நிலைமை குறித்து பேச அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் பேசிய சிவசேனாவின் உறுப்பினர்கள், மும்பை விவகாரத்தை மீண்டும் எழுப்பினர். இதைத் தொடர்ந்து அக்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நடவடிக்கை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை காலையில் தொடங்கியதும், ராம்தேவ் போராட்டம் குறித்து பாஜக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதனால், மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி அவையின் அலுவல் நடவடிக்கையை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைத்தார். மீண்டும் அவை கூடிய போதும் பாஜக இதே விவகாரத்தை எழுப்பியது. அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த பி.ஜே. குரியன், உரிய நோட்டீஸ் கொடுத்தால் இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க அனுமதியளிக்கப்படும் என்றார். ஆனால் பாஜகவினர் இதை எற்கவில்லை. இதனால் மீண்டும் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications