சென்னையில் ரயிலை பிடிக்க பிளாட்பாரத்தில் ஓடியவர், தவறி விழுந்து பலி
சென்னை: சென்னையில் ரயிலை பிடிப்பதற்காக பிளாட்பாரத்தில் வேகமாக ஓடியவர், கால் தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
சென்னையை அடுத்த பெரம்பூரில் வசித்து வந்தவர் இனிகோ(39). ஏ.சி.மெக்கானிக்கான இவருக்கு சுகந்தி(30) என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. சிவகங்கையை சேர்ந்த இனிகோ, அங்கு நடைபெற உள்ள கோவில் திருவிழாவிற்கு செல்ல, எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தார்.
எழும்பூர் ரயில் நிலையத்தில் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் 4வது பிளாட்பாரத்தில் வந்து நிற்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இனிகோ பிளாட்பாரத்திற்கு செல்ல தாமதமாகிவிட்டதால், ரயில் புறப்பட ஆரம்பித்தது.
இதனால் உடமைகளுடன் ரயிலில் ஏற இனிகோ பிளாட்பாரத்தில் ஓடினார். அப்போது எதிர்பாராத வகையில் இனிகோவின் கால் தடுமாறி பிளாட்பாரத்தில் விழுந்தார். இதில் அவருக்கு தாடையில் படுகாயம் ஏற்பட்டு மயக்கமடைந்தார்.
இதை கண்ட அங்கிருந்தவர்கள், உடனடியாக 108 ஆம்பிலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர். டாக்டர்கள் வந்து பரிசோதித்த போது, இனிகோ இறந்துவிட்டது தெரிய வந்தது. இது குறித்து எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, இனிகோவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications