கொதிக்கும் எண்ணெயில் இருந்து பிரசாதத்தை கையால் எடுத்து வழங்கிய பூசாரி: பக்தர்கள் பரவசம்
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே நடந்த கோயில் திருவிழாவில் கொதிக்கும் எண்ணெயில் இருந்து பிரசாதத்தை எடுத்து பூசாரி வெறும் கையால் வழங்கிய சம்பவம் பக்தர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகில் உள்ள ஜம்புகுடப்பட்டி கிராமத்தில் புகழ் பெற்ற அருள்மிகு சென்னம்மாள் கோயில் உள்ளது. அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் கோயில் திருவிழா மிகவும் பிரபலம். இந்த வருட திருவிழா கடந்த 2 நாட்களாக வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. இதில் அருள்மிகு சென்னம்மாள் உற்சவ சிலைக்குச் சிறப்புப் பூஜைகளை பூசாரி நடத்தினார்.
முதல் நாள் நிகழ்ச்சியாக ஜம்புகுடப்பட்டியில் இருந்து நடுக்காட்டூர், கோணனூர், நான்குரோடு, போச்சம்பள்ளி பேருந்து நிலையம் வரை சிலம்பாட்டம், நையாண்டி, பம்பை, ஒயிலாட்டத்துடன் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. அடுத்து இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக, அம்மனுக்கு அபிஷேக அலங்காரம், சிறப்புப் பூஜைகள் நடந்தன.
இதைத் தொடர்ந்து கோயில் பூசாரி காளியப்பன் பக்தர்கள் முன்பு கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டு அதிரசத்தை எடுத்து பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கினார். இந்த பிரசாதத்தை வாங்கிச் சாப்பிட்டால் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பேறு கிடைக்குமாம். கடன் பிரச்சனையில் உள்ளவர்களுக்குக கடன் நிவர்த்தி கிடைக்குமாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்குமாம்.
இதனால் கொதிக்கும் எண்ணெயில் இருந்து பூசாரி வழங்கும் பிரசாதத்தை வாங்க சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வந்த பக்தர்களிடையே கடும் போட்டி நிலவியது.