எங்களை கர்நாடகாவில் மனிதர்களாகவே மதிப்பதில்லை- அஸ்ஸாமியர் புகார்
பெங்களூர்: எங்களைக் கொல்ல பெரும் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக நாங்கள் அஞ்சுகிறோம். மேலும் கர்நாடகத்தில் எங்களை யாருமே மதிப்பதில்லை. எனவேதான் சொந்த மாநிலத்திற்கே போகிறோம் என்று பெங்களூரை விட்டு ஆயிரக்கணக்கில் அஸ்ஸாமுக்குப் புறப்பட்ட அஸ்ஸாமியர்கள் கூறினர்.
நேற்று இரவு பெங்களூர் சிட்டி ரயில் நிலையம் பெரும் பரபரப்பைச் சந்தித்து. ஆயிரக்கணக்கான அஸ்ஸாமியர்கள் அங்கு திரண்டு வந்தனர். குவஹாத்தி செல்லும் ரயில்களில் டிக்கெட் கேட்டு அவர்கள் குவிந்ததால் ரயில்வே அதிகாரிகளும் குழப்பமடைந்தனர். இதையடுத்து உயர் ரயில்வே அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி சிறப்பு ரயில்களை இயக்க உத்தரவிட்டனர். அதன்படி 2 ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஒவ்வொரு ரயிலிலும் 20 பெட்டிகள் இணைக்கப்பட்டன.
இந்த ரயில்களில் முண்டியடித்தபடி அஸ்ஸாமியர்கள் ஏறினர். குழந்தை குட்டியோடு மூட்டை முடிச்சுகளோடு அவர்கள் ரயிலில் ஏறினர். பலர் ரயில் வாசல் வழியாக ஏற முடியாத அளவுக்கு கூட்டம் இருந்ததால் அவசர காலத்தில் திறக்கப்படும் ஜன்னல்களைத் திறந்து அதன் வழியாக உள்ளே நுழைந்தனர். கைக்குழந்தைகளுடன் பலர் தங்களது மனைவியரையும், குடும்ப உறுப்பினர்களையும் இவ்வாறு அனுப்பியது பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
ஏன் இப்படி பீதியடைந்து கிளம்புகிறீர்கள் என்று ஒருவரிடம் கேட்டபோது, அஸ்ஸாமியர்களை குறி வைத்துத் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. எங்களைக் கொல்ல பெருமளவில் திட்டம் தீட்டப்படுவதாகவும் அறிந்தோம். இதனால்தான் போகிறோம்.
மேலும் கர்நாடகத்தில் எங்களுக்கு எப்போதுமே பாதுகாப்பு இருந்ததில்லை. எங்களை இங்குள்ளவர்கள் மனிதர்களாகவே மதிப்பதில்லை. ஏளனமாகத்தான் பார்ப்பார்கள். எனவேதான் எங்களது சொந்த ஊருக்கே போகிறோம் என்றார்.
வட கிழக்கு மாநிலத்தவருக்குப் பாதுகாப்பு அளித்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்
இதற்கிடையே, பெங்களூரை விட்டு தங்களது சொந்த மாநிலத்திற்குக் கிளம்பிய அஸ்ஸாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்தில் 250க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தடிகள் புடை சூழ பாதுகாப்பு கொடுத்து புதிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர்கள் வட கிழக்கு மாநிலத்தவர்களுக்கு ஆறுதல் கூறிப் பேசினர். இந்தப் பாதுகாப்புப் படைக்கு பெங்களூர் நகர ஆர்.எஸ்.எஸ். தலைவர் கருணாகர ராய் தலைமை தாங்கினார்.