திடீர் வதந்தி- பெங்களூரை விட்டு ஆயிரக்கணக்கில் வெளியேறும் வடகிழக்கு மாநிலத்தவர்

காட்டுத் தீயாக வதந்தி
கர்நாடக மாநிலத்தில் வாழும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தோர் மீது ஆகஸ்ட் 20-ந் தேதி ரம்ஜான் நோன்புக்குப் பிறகு அசாமில் நடத்தப்பட்டது போன்று மிகப் பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்ற வதந்தி நேற்று திடீரென பரவியது. செல்போன் எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக், டிவிட்டரி இந்த வதந்தி காட்டுத் தீயாகப் பரவியது.
இதையடுத்து தங்கள் உடைமைகளுடன் ஒரே நேரத்தில் பெங்களூர் ரயில்நிலையத்தில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். கிடைக்கிற ரயிலில் ஏறி எப்படியாவது சொந்த மாநிலத்துக்கு போய்விட வேண்டும் என்ற தவிப்பில் அனைவரும் இருந்தனர். அலைஅலையாய் ஆயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக ரயில் நிலையத்தை இரவு முழுவதும் முற்றுகையிட்டுக் கொண்டே இருந்தனர்.
இதனால் "வதந்திகளை நம்ப வேண்டாம்.. உரிய பாதுகாப்பு தரப்படும் என்று வடகிழக்கு மாநிலத்தவரிடம் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் கேட்டுக் கொண்டதும் பலனளிக்கவில்லை.
பிரதமர் விசாரணை
இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷின்டே ஆகியோர் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரிடம் புதன்கிழமை இரவு தொடர்பு கொண்டு, வடகிழக்கு மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி கேட்டுக் கொண்டனர். மேலும் அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாயிடம் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பேசியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். கவலை
இதனிடையே வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தற்போது சமூக விரோதிகளால் தாக்குதலுக்கு ஆளாவதாக செய்தித் தாள்களிலும் ஊடங்கங்களிலும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகைய காட்டுமிராண்டித் தாக்குதல்களை அனுமதிக்கக் கூடாது. அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர்களில் ஒருவரான ராம் மாதவ் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications