பத்மா சேஷாத்திரி பள்ளி நீச்சல் குள விபத்து வழக்கு-செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைப்பு
சென்னை சேலையூர் ஜியோன் பள்ளிப் பேருந்தின் ஓட்டையிலிருந்து விழுந்து சிறுமி ஸ்ருதி பலியான விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இந்த நிலையில் பத்மா சேஷாத்திரி பள்ளி வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவன் ரஞ்சன் மூழ்கி பலியான விவகாரத்தில் இன்று காலை கார்த்திக் ராஜா என்பவர் ஒரு பொது நலன் மனுவைத்தாக்கல் செய்தார். இதை அவசர வழக்காக கருதி விசாரணை நடத்த அவர் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று பிற்பகல்வாக்கில் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் அதாவது காவல்துறை தரப்பில் வழக்கு ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து இந்த வழக்கு ஆவணங்களை செவ்வாய்க்கிழமைக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட தலைமை நீதிபதி வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மு.க.ஸ்டாலின் அஞ்சலி:
இந் நிலையில் பலியான மாணவன் ரஞ்சன் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நேற்று மாலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆழ்வார் திருநகரில் உள்ள வீட்டுக்கு மாணவன் ரஞ்சன் உடல் இரவு எடுத்து வரப்பட்டது. இரவு முழுவதும் ஏராளமான பொதுமக்கள், திரையுலக பிரமுகர்கள் ரஞ்சன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மனோகர் வீட்டுக்கு வந்து ரஞ்சன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
காலை 9 மணிக்கு ரஞ்சன் உடல் போரூர் மின் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.