தமிழகத்தில் வாழும் வெளி மாநில மக்கள் பயப்பட தேவையில்லை- முதல்வர் ஜெயலலிதா
அசாம் மாநிலத்தில் வெளி மாநில மக்கள் வெளியேற்ற வேண்டும் என்று கலவரம் ஏற்பட்டது. இதேபோல தென்னிந்திய பகுதிகளில் குடியேறியுள்ள வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறுவதாக செய்திகள் வெளியானது. இதனால் பெங்களூர், மைசூர் நகரங்களில் வசித்து வந்த வடகிழக்கு மாநிலத்தினர் சொந்த ஊர்களுக்கு கூட்டம் கூட்டம் வெளியேறி வருகின்றனர்.
தமிழகத்திலும் இது போன்ற தாக்குதல் சம்பவம் நடைபெற வாய்ப்புள்ளதாக நேற்று புரளி பரவியது. இதையடுத்து சென்னையில் வசித்து வந்த வெளி மாநிலங்களை சேர்ந்த மக்கள் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
இந்த நிலையில் அமைதியாக சூழ்நிலை நிலவும் தமிழகத்தில் இருந்து, வெளி மாநிலத்தவர் பயந்து கொண்டு சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,
அசாமில் சமீபத்தில் நடந்த சம்பவங்களை அடுத்து சென்னையில் வாழும் வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்த மக்கள் தங்கள் பாதுகாப்பு எண்ணி அச்சம் அடைந்துள்ளதாக, எனக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மக்கள் எந்தவித அச்சமும் கொள்ள தேவையில்லை.
தமிழக காவல் துறையினர் ஏற்கனவே பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அமைதியாக திகழும் தமிழகத்தில், அனைத்து மாநில மக்களும் பிரச்சனை இன்றி வாழ்வதற்கு எனது அரசு உறுதி அளிக்கிறது. எனவே யாரும் அச்சம் காரணமாக சென்னையை விட்டு வெளியேற வேண்டாம் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.