சிவகாசியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்: எதிர்த்து ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை
சிவகாசி: சிவகாசியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்த போது, பலத்த எதிர்ப்பு தெரிவித்த ஆட்டோ டிரைவர் ஒருவர் தீக்குளித்து உடல் கருகி, அலறித் துடித்தபடி பலியானார்.
சிவகாசி- திருத்தங்கல் ரோட்டில் சிறுகுளம் கண்மாய் உள்ளது. கடந்த 35 ஆண்டுகளாக இந்த கண்மாய் கரையை ஆக்கிரமித்து 100க்கும் மேற்பட்ட கடைகள், 50க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்தப் பகுதிக்கு பெரியார் நகர், திருநகர் என பெயரிடப்பட்டிருந்தது. இங்கு ஏராளமான ஏழைக் குடும்பங்கள் வசித்து வருகின்றன.
கடந்த ஆண்டு சிவகாசி வரி செலுத்துவோர் சங்கம் சார்பில் அரசுக்கு சொந்தமான குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகளை அகற்ற கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது.
எனினும் இந்தப் பணி உடனடியாக நடக்கவில்லை. 10 நாட்களுக்கு முன் மாவட்ட கலெக்டர் ஹரிகரன் இங்கு நேரில் சென்று ஆக்கிரமிப்பு செய்தவர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டார். இது தொடர்பாக பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டினார்.
இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு கலெக்டரின் உத்தரவின்பேரில் மதுரை, விருதுநகர் மாவட்ட போலீஸ் எஸ்பிக்கள் பாலகிருஷ்ணன், நஜ்மல் ஹோடா மற்றும் நகராட்சி அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள், ஆர்.டி.ஓ., தாசில்தார் ஆகியோர் 200க்கும் மேற்பட்ட போலீசாருடன் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக பெரியார் நகர் பகுதிக்கு சென்றனர்.
இதையடுத்து பொது மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி தொடங்கியது. தங்களின் வீடுகள் இடிக்கப்படுவதை பார்த்த வீடுகளில் இருந்த பெண்களும், முதியோரும், குழந்தைகளும் தரையில் விழுந்து புரண்டு கண்ணீர்விட்டுக் கதறினர்.
இதனால் அப்பகுதி முழுவதும் அழுகுரல் சத்தமாக கேட்டது. ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது சிலர் அதன் டிரைவரை சரமாரியாக தாக்கினர்.
இதையடுத்து எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் மீது போலீசார் கடுமையான தடியடி நடத்தினர். பலரை போலீஸ் வேன்களில் ஏற்றினர். அப்போது, ஆட்டோ டிரைவர் கணேசன் என்பவர் தன் வீட்டில் இருந்து மண்ணெண்ணெய் எடுத்து வந்து உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
துடிதுடித்தபடி, அலறிய அவரை போலீசார் மற்றும் அதிகாரிகள் உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமைககு அனுப்பி வைத்தனர். எனினும் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
கணேசன் இறந்த தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஆத்திரமடைந்து அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். அப்போது சிலர் போலீசார் மீது கற்களை வீசினர். இதையடுத்து கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.
மேலும் கூடுதல் போலீசார் வர வழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வருவதாலும், ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை தற்காலிகமாக நிறுத்த கலெக்டர் ஹரிகரன் உத்தரவிட்டார்.
இதையடுத்து பெரியார் நகர், திருநகர் பகுதிகளில் நடைபெற்று வந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நிறுத்தப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் உள்பட கருவிகள் திரும்பக் கொண்டு செல்லப்பட்டன.
தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பும், பதட்டமும் நிலவி வருகிறது. இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே இன்று காலை மேலும் ஒரு குடும்பத்தை சேர்ந்த கணவன்- மனைவி இருவரும் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீக் குளிக்க முயன்றனர். இதை போலீசார் தடுத்து நிறுத்தினர்.