வடகிழக்கு மாநிலத்தவர் விவகாரம்: மத்திய அரசு மீது மனித உரிமை அமைப்பினர் குற்றச்சாட்டு
சென்னை: வடகிழக்கு மாநிலத்தவர் விவகாரத்துக்கு மத்திய அரசின் மெத்தனப் போக்கே காரணம் என்று மனித உரிமை அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த மனிதம் மனித உரிமை அமைப்பின் அக்னி சுப்பிரமணியம், தமிழ் தன்னுரிமை இயக்க தலைவர் பாவலர் மு. இராமச்சந்திரன், தமிழக மக்கள் கட்சியைச் சேர்ந்த கோபி நாராயணன், விழுதுகள் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த செ. அய்யாபிள்ளை ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அண்மை காலமாக அசாம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் வன்முறை நிகழ்வுகளின் எதிரொலியாக மும்பை மற்றும் பெங்களூர் போன்ற நகரங்களில் வடகிழக்கு மாநில மக்களுக்கு எதிரான தாக்குதல் நடைபெறுகின்றன.
இதனால், அச்சம் கொண்டு வடகிழக்கு மாநில மக்களில் பலர் தங்களின் உயிரை பாதுகாத்துக் கொள்ள தங்களின் சொந்த இடங்களுக்குக் கூட்டம் கூட்டமாகப் பயணமாகி வருகின்றனர்.
அதே போல், தமிழகத்திலும் தங்களின் மீது தாக்குதல் நடத்தப்படுமோ என்ற அச்சத்திலும், கவலையிலும் இருக்கும் அவர்கள், தாங்கள் பார்த்து வந்த பணிகளையெல்லாம் விட்டு விட்டு, தங்களின் ஊர் நோக்கி புறப்படத் தொடர் வண்டி நிலையங்களில், பெரும் திரளாகத் திரண்டுள்ளனர் என்பது "யாதும் ஊரே! யாவரும் கேளீர்" என்ற கொள்கையுடைய நமக்குப் பெரும் வருத்தமளிப்பதாக உள்ளது.
ஏழைகளாக, கூலிகளாக வாழ வழித் தேடி வரும், வடகிழக்கு மாநில மக்களை நமது தமிழ்நாடு அப்படியெல்லாம் அல்லல் படுத்தி வதக்கி கொடுமைபடுத்தும் என யாரும் அஞ்சத் தேவையில்லை என்பதைத் தமிழக மக்கள் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம். அது போல், ஒரு சான்றாண்மை மிக்க அறிக்கையினை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வெளியிட்டுள்ளதையும் வரவேற்கிறோம்.
தமிழ்நாடு என்றென்றும் சாதி, மத மோதல்களை ஏற்று வரவேற்காது என்பது போலவே, இங்குள்ள யாரும் எந்த மொழி இனத்தார் மீதும் எந்தவித தாக்குதல்களை நிகழ்த்த மாட்டார்கள் என்ற உண்மையை வடகிழக்கு மாநில மக்கள் உணர்ந்து, தமிழகத்தில் அச்சமின்றி இருக்கலாம். இந்தளவுக்கு வடகிழக்கு மாநில மக்களின் மேல், சில மாநிலங்களில் வெறுப்புணர்ச்சி தூண்டப்படுவதற்கு, மத்திய அரசின் மெத்தன போக்கே காரணமாகும்.
எந்தவொரு சிக்கலையும் தொடக்கத்திலேயே கண்டறிந்து, தீர்வு காணப்பட வேண்டும். அப்படியொரு அவசரத்தை உணர்ந்து மத்திய அரசு இனிமேலாவது செயல்பட வேண்டு என்று கேட்டுக் கொள்கிறோம். இந்தச் சிக்களுக்கு உண்மையான காரணங்களைக் கண்டுபிடித்து, இது போன்ற நிலைமைகளைத் தடுக்கப்பட வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications