பிறர்க்கு கொடுத்து உதவும் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகள்-விஜயகாந்த்
இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
இஸ்லாமியர்களுக்கு ரமலான் மாதம் புனிதமானது. இம்மாதத்தில்தான் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பினை மேற்கொள்கின்றனர். பசிப்பிணியின் தன்மை பற்றி அனுபவப்பூர்வமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பை இந்நோன்பு அளிக்கிறது. இதன் மூலம் வறுமையை ஒழிப்பதற்கும், ஏழைகளுக்கு உதவுவதற்கும் உரிய கடமை வலியுறுத்தப்படுகிறது. இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவதன் மூலம் ஒரு சமூக அமைதியையும், ஒற்றுமையையும் நிலைநாட்ட முடியும்.
இஸ்லாமியர்கள் சமூக, பொருளாதார அடிப்படையில் அடிமட்டத்தில் உள்ளனர். அவர்களை முன்னேற செய்வது ஒரு முற்போக்கான அரசின் கடமையாகும். இன்று சிறுபான்மை இனத்தவராக உள்ள அவர்களுக்கு உரிய பாதுகாப்பே கேள்விக்குறியாகி வருகிறது.
அஸாமில் நடைபெற்ற கலவரமும், அதன் விளைவாக இதர மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலைமைகளும் கவலை அளிப்பதாக உள்ளன. இஸ்லாம் சமுதாயத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது ஒரு அரசு மட்டுமல்ல, பெரும்பான்மையான சமுதாயத்தினரின் கடமையும் ஆகும். அந்த வகையில் வகுப்பு ஒற்றுமை காக்கப்பட வேண்டும் என்ற அதே நேரத்தில், அனைத்து சமுதாயத்தினரும் ரம்ஜான் விழாவில் பங்கேற்பது பொருத்தமானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.
ஊழலையும், வறுமையையும் ஒழிப்பதன் மூலமே சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை வெகுவாக குறைக்க முடியும். இதை வலியுறுத்தும் தே.மு.தி.க. சார்பில் பிறர்க்கு கொடுத்து உதவும் பெரும் பண்பை போற்றும் இஸ்லாம் மார்க்கத்தை சேர்ந்த அனைத்து மக்களுக்கும் என்னுடைய இதயமார்ந்த ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஞானதேசிகன்
காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள செய்தியில்,
புனித இஸ்லாம் வலியுறுத்திய நோன்புப் பெருநாட்களைத் தொடர்ந்து இன்று ஈகைத் திருநாளாக இஸ்லாமியப் பெருமக்களால் போற்றி வணங்கப்படும் ரம்ஜான் பண்டிகை நாடெங்கும் உவகையோடு கொண்டாடப்படுகிறது.
அண்ணல் நபிகள் நாயகம் அருளிய அறநெறிக்கேற்ப ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான முப்பது நாட்கள் நோன்பிருந்து வசதி படைத்தோரும் பசியின் கொடுமையை உணர்ந்து ஏழை எளியோருக்கு உதவிடும் 'ஸஹாத்" என்னும் கடமையை நிறைவேற்றும் உன்னத விழா ரம்ஜான்.
இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்கு முதல் பிரதமர் நேரு காலம் தொடங்கி இந்திரா, ராஜீவ், ஆகிய பிரதமர்களின் காலத்திலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து அவர்களது
வழிநின்று இன்றைக்கு சோனியா வழிகாட்டுதலில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு அம்மக்களுக்கென்று தனி அமைச்சகம், தனி அமைச்சரை உருவாக்கியுள்ளது. மேலும் அவர்களது சமூகப் பொருளாதார நிலையைக் கண்டறிய நீதியரசர் மிஸ்ரா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. அக்கமிஷன் பரிந்துரையை ஏற்று சிறுபான்மை மக்களின் வாழ்வு உயர்வுக்கு 15 அம்சத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அவர்களது நலனுக்கென்று 165 பணிகளுக்கு மொத்தம் பல்லாயிரம் கோடி
செலவிடப்படுகிறது.
இந்நன்னாளில் இறைவனின் இறுதித் தூதர்அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் உலகுக்கு போதித்த மனிதநேயம், நல்லொழுக்கம், அன்பு, அமைதி, சமாதானம், சகோதரத்துவம் ஆகிய உயரிய நெறிகளை ஏற்று வாழ்ந்து, நாட்டில் மத, இனப் பிரிவுகளிடையே ஒற்றுமை, ஒருமைப்பாடு மிளிர்ந்து, வன்முறைகள் ஒழிந்து நல்லிணக்கம் உருவாக அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம், உயர்வோம் என்றுகூறி அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும், என் சார்பிலும் மனமுவந்த ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.