ஆடு எப்படி கத்தும், மாடு எப்படிக் கத்தும்?... நடித்துக் காட்டிய விஜயகாந்த்!!!
சேலத்தில் நடந்த தேமுதிகவின் பழங்குடியினருக்கான நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசினார் விஜயகாந்த். அப்போது அவர் கூறுகையில்,
வடமாநிலத்தவர்கள் அச்சமடைய வேண்டாம் என்று பிரதமர் மன்மோகன் சிங் சொல்கிறார். அங்கு எங்கள் தமிழினத்தை சிங்கவளவர்கள் அடித்து கொன்றார்களே, அப்போது இந்த பிரதமர் எங்கே போனார்.
இப்போது நடக்கும் இந்த மாநாட்டுக்கு நேற்று மாலை 5 மணிக்குத்தான் அனுமதி தருகிறது போலீஸ். இந்த அரசு எங்களைப் பார்த்து பயந்துகொண்டிருக்கிறது.
மக்களுக்கு மாநில அரசு எதுவுமே செய்யவில்லை. தேமுதிக சார்பில் நான் இரண்டு லட்சம் மதிப்புள்ள இலவச பொருட்களை வழங்கினால், மாநில அரசு 20 லட்சத்துக்கு வழங்க வேண்டும். அதைவிட்டுவிட்டு எங்களை ஏன் தடுக்கிறீர்கள்.
ஆடு, மாடு கொடுத்துவிட்டு, அம்மா அம்மா என்று கத்துவதாக அதிமுகவினர் சொல்கிறார்கள். மே மே என்றுதான் ஆடு கத்தும், மா மா என்றுதான் மாடு கத்தும். மக்களை ஏன்தான் இப்படி ஏமாற்றுகிறார்களோ?
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை 6 லட்சம் பேர் எழுதினார்கள். அதில் 2 ஆயிரம் அல்லது 3 ஆயிரம் பேர்தான் தேர்வு செய்யப்படுவார்கள். அதிலும் இப்போது கேள்வித்தாள் அவுட் என்று செய்தி பரவி, மாணவர்களின் எதிர்காலம் வீணாகிவிட்டது.
ஒரு அங்கன்வாடி பள்ளியில் சுண்ணாம்பு அடிப்பதைக் கூட ஆளும்கட்சியினர் தடுக்கிறார்கள். இருந்தாலும் எங்க கட்சிக்காரங்க அந்த பள்ளிக்கு போயிட்டாங்க. நான்தான் எங்க கட்சி எம்எல்ஏகிட்ட வேண்டாம் விட்டுவிடுங்க. வேலை செய்யவிடாமல் தடுத்ததாக நம்மமேல கேஸ் போடுவாங்க என்று சொன்னேன். அரசாங்கமே டாஸ்மாக்கை நடத்துகிறது. மிடாஸ் யாருடைய கம்பெனி என்றார் விஜயகாந்த். நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.