வடகிழக்கு மாநிலத்தவர் வெளியேற காரணமான போலி புகைப்படங்கள்- பாக்.குக்கு அனுப்பும் இந்தியா
டெல்லி: பல்வேறு மாநிலங்களில் இருந்து வடகிழக்கு மாநிலத்தவர் பல்லாயிரக்கணக்கில் வெளியேறக் காரணமாக இருந்த போலி புகைப்படங்கள், வீடியோக்கள் குறித்த விசாரணயை இந்திய உள்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
பர்மாவில் புயல் மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் புகைப்படங்களை அசாம் வன்முறையால் உயிரிழந்தோர் போல சித்தரித்து பீதியூட்டும் வாசகங்களுடன் இணையதளங்களில் உலவவிட்டதால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வசித்து வந்த வடகிழக்கு மாநிலத்தவர் பெரும் அச்சமடைந்து அந்தந்த மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் வெளியேறிவிட்டனர்.
இத்தகைய அச்சத்தையும் வன்முறையையும் தூண்டும் வகையில் சுமார் 250 இணையதளங்கள் தகவல்களை பரவவிட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பாகிஸ்தான் நாட்டில் இருந்து அப்லோடு செய்யப்பட்டவை என்கிறது உள்துறை அமைச்சகம்.
இந்த போலி புகைப்படங்களை பரப்பிய இணையதளங்கள் பற்றிய தகவல்களை உள்துறை அமைச்சகம் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்துள்ளது. இதுபோன்ற உணர்வுப்பூர்வமான பிரச்சனைகளிலாவது பாகிஸ்தா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.