பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வலியுறுத்தி நாடாளுமன்ற இரு அவைகளையும் முடக்கின எதிர்க்கட்சிகள்
டெல்லி: நிலக்கரி சுரங்க ஊழலுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் இன்று முடக்கப்பட்டன.
2005-ம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்கங்களை ஏலம்விடாமல் தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்ததில் ரூ1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்கிறது தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கை. மத்திய அரசோ இந்த அறிக்கை தவறானது என்று வாதிட்டு வருகிறது.
இன்று காலை மக்களவை கூடிய போது பாஜக உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். அவர்களுக்கு இடதுசாரி கட்சிக உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். அதிமுக, தெலுங்குதேசமும் இந்த அமளியில் இணைந்து கொண்டன. எதிர்க்கட்சிகளின் முழக்கங்களுக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் அவை நடவடிக்கைகள் முதலில் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை மீண்டும் கூடியபோதும் அமளி நீடித்ததால் நாள் முழுவதும் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
மாநிலங்களவையில் பாரதிய ஜனதா தலைவர்கள் ரவிசங்கர் பிரசாத், வெங்கய்யா நாயுடு ஆகியோர் மத்திய அரசுக்கு எதிராக கடுமையாக தாக்கிப் பேசினர். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த களேபரத்துக்கு மத்தியில் மத்திய அமைச்சர் பேனிபிரசாத் வர்மா, விலைவாசி உயர்வை ஆதரித்துப் பேசியதற்கு சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அமளிதுளிபட்டது மாநிலங்களவை. வேறு வழியில்லாமல் மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.