தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக அனைவரும் சேர்ந்து பிரதமரை சந்திப்போம்-விஜயகாந்த் அழைப்பு
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
சிங்கள இனவெறி அரசு தமிழக கடலோர மீனவர்கள் மீது தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டது. இதனால் உயிர் பலியானோர், உடல் உறுப்புகளை இழந்தோர், உடமைகளை இழந்தோர், எல்லாவற்றிற்கும் மேலாக வாழ்வுரிமைகளை இழந்தோர் என்ற அவல நிலைக்கு இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் ஆளானார்கள்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தையே அழித்து விட்டோம் என்று கொக்கரிக்கும் சிங்கள இனவெறி அரசு இன்று வரை தமிழக கடலோர மீனவர்கள் மீது தொடுத்த தாக்குதல்களை நிறுத்திக் கொள்ளவில்லை. ஆனால் மாறி, மாறி ஆட்சிக்கு வந்த கருணாநிதி ஆனாலும் சரி, இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா ஆனாலும் சரி, கச்சத்தீவை மீட்கவோ, கடலோர மீனவர்களின் ரத்தக் கண்ணீரை துடைக்கவோ வழி காண முடியவில்லை.
தினந்தோறும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தாக்கப்படுவது தொடரும் சோகக்கதையாக உள்ளது. முதலமைச்சர் என்ற முறையில் அவ்வப்பொழுது மத்திய அரசுக்கும், குறிப்பாக பிரதமருக்கும் கடிதங்கள் எழுதியும் இன்று வரை பலனில்லை.
சுண்டைக்காய் நாடான இலங்கை தற்போது கூட, இந்தியா கேட்ட 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை எந்த தயக்கமும் இல்லாமல் சீனாவிற்கு வாரி வழங்கி உள்ளது. இதைவிட இந்திய அரசின் வெளியுறவு கொள்கைக்கு ஏற்பட்ட வெட்கக் கேடான தோல்வி எதுவும் இல்லை.
தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, தமிழ் உணர்வுள்ள, தமிழ்நாட்டு நலனில் அக்கறை கொண்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் கட்சி பாகுபாடின்றி, தமிழ்நாட்டு மக்களின் ஒட்டு மொத்த உணர்வை பிரதிபலிக்கின்ற வகையில் ஒரு குழுவாக டெல்லி சென்று, பிரதமரை சந்தித்து நிலைமையை விளக்கி தீர்வு காண்பதே பொருத்தமானதாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.