வீடியோ கேம் பிரச்சனை: கோவில்பட்டி அருகே கல்லூரி மாணவர்கள் இருவர் அடித்துக் கொலை
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே கல்லூரி மாணவர்கள் 2 பேர் அடித்துக் கொலை செய்யபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி ஊரணி தெருவில் செந்தில்குமார் என்பவருக்குச் சொந்தமான வீடியோ கேம் விளையாட்டு நிறுவனம் இயங்கி வருகின்றது. மின்சாரம் இல்லாத நேரங்களில் கூட ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுவதால் அங்கு மாணவ, மாணவியரின் கூட்டம் அதிக அளவில் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு விளையாடுவதில் ஏற்பட்ட மோதலில் செல்வா என்ற மாணவரை ஒரு கும்பல் அடித்து உதைத்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த நிறுவன உரிமையாளரும், அப்பகுதி இளைஞர்களும் சேர்ந்து அந்த மாணவர்களைக் கண்டித்து இனிமேல் இந்த பக்கமே வரக் கூடாது என எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் எச்சரிக்கையையும் மீறி நேற்று முன்தினம் இரவு 5 மாணவர்கள் மீண்டும் வீடியோ கேம் விளையாட வந்துள்ளார்கள். அப்போது நிறுவன உரிமையாளர் மற்றும் சிலரும் சேர்ந்து மாணவர்களைத் தடுத்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் மாணவர்களை 9 பேர் கொண்ட கும்பல் அடித்து உதைத்துள்ளது. இதில் கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வரும் பாலமுருகன்(19), காரியாபட்டியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வரும் ராமநாதன்(21) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த அவர்களுக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலில் சிகிச்சையளிக்கபட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்கள்.
இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் இருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.