ஆண்மை சோதனைக்கு அவகாசம் கோரும் நித்திக்கு எதிர்ப்பு- நாளை கர்நாடக அரசு மனு
செக்ஸ் குற்றச்சாட்டில் சிக்கிய நித்தியானந்தாவை ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராக கர்நாடக சிஐடி போலீஸ் 7 முறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை என்று கூறிவரும் நித்தியானந்தாவோ ஆண்மை சோதனைக்கு வராமல் இழுத்தடித்தார். வேறுவழியில்லாமல் கர்நாடக சிஐடி போலீசார் ராம்நகர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதையடுத்து ஜூலை 30-ந் தேதியன்று பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் ஆண்மை சோதனை, குரல் சோதனை செய்வதற்காக நித்தியானந்தா ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது,
நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கால அவகாசம் கோரும் மனுவை தாக்கல் செய்ய சொல்லிவிட்டு கைலாயயாத்திரை கிளம்பிவிட்டார் நித்தியானந்தா. இம்மனு மீது உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகந்நாதன் முன்னிலையில் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. அரசுத் தரப்பில் ஆட்சேபனை மனுத்தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு அரசுத் தரப்பில் இருநாட்கள் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நாளை வெள்ளிக்கிழமையன்று விசாரணையை ஒத்தி வைத்தார் நீதிபதி. ஆண்மை சோதனைக்கு கால அவகாசம் கோரும் நித்தியானந்தா மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆட்சேபனை மனுவை நாளை தாக்கல் செய்கிறது கர்நாடக அரசு.