உத்தரகண்ட்: குருத்வாராவில் பெருநாள் தொழுகை நடத்திய முஸ்லிம்கள்
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் இடத்தில் மழைநீர் தேங்கியதால் குருத்வாராவில் பெருநாள் தொழுகை நடத்த சீக்கியர்கள் அனுமதி அளித்தது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் என்னும் சிறிய கிராமத்தில் பலத்த மழை பெய்ததால் முஸ்லிம்கள் ஈத் பெருநாள் தொழுகை நடத்தும் காந்தி மைதானத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால் தொழுகை நடத்த இடமின்றி அவர்கள் தவித்தனர். இந்நிலையில் இது குறித்து அறிந்த சீக்கியர்கள் தங்கள் குருத்வாராவில் வந்து தொழுகை நடத்துமாறு முஸ்லிம்களை அழைத்தனர். அவர்களின் அழைப்பை ஏற்ற முஸ்லிம்கள் ஜோஷிமத்தில் உள்ள குருத்வாராவில் பெருநாள் தொழுகை நடத்தினர். அதன் பிறகு முஸ்லிம்களும், சீக்கியர்களும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி நட்பை வெளிப்படுத்தினர். ஈத் கொண்டாட்டத்தில் இந்துக்களும் கலந்து கொண்டனர்.
இது குறித்து மௌலவி ஆசிப் கூறுகையில், சீக்கியர்களின் தாராள குணத்தை பாராட்டுவதுடன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து மதங்களையும் எப்படி மதிக்க வேண்டும் என்பதை அவர்கள் காட்டிவிட்டனர் என்றார்.