முதலில் பி.ஆர்.பழனிச்சாமி.. அடுத்தது தயாநிதி அழகிரி?
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரத்தில் பி.ஆர்.பி. நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து கோடிகோடியாக கொள்ளை லாபம் சம்பாதித்தன. இதனால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக கடந்த சில வாரங்களாக கிரானைட் குவாரிகளில் தொடர்ந்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கிரானைட் மலைகளை விழுங்கியது தொடர்பாக பி.ஆர். பழனிச்சாமி, அழகிரியின் மகன் துரை தயாநிதி உள்ளிட்ட 18 பேரை போலீசார் தேடிவந்தனர். பி.ஆர். பழனிச்சாமியின் ஒட்டுமொத்த குடும்பம் மீதும் வழக்குகள் பாய இனியும் எஸ்கேப்பாக விரும்பாமல் பி.ஆர். பழனிச்சாமியே போலீசில் சரணடைந்துவிட்டார்.
தற்போது பி.ஆர். பழனிச்சாமியை வளைத்துவிட்ட போலீஸுக்கு கர்நாடகத்தில் சட்டவிரோத சுரங்க ஊழலில் தொடர்புடைய ஜனார்த்த ரெட்டி மீது என்ன பிரிவுகளில் எல்லாம் வழக்கு போடப்பட்டதோ அதே மாதிரி உத்தரவுகளைப் போட்டு வழ்ககை ஸ்டிராங்காக வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படி இறுக்கமாக வலை பினன்ப்படுவதற்கும் ஒரு காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
எதற்கெடுத்தாலும் பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுக தலைவர் கருணாநிதி பல்லவி பாடுவார். அதனால் இம்முறை எடுத்த உடனேயே திமுக புள்ளிகள் மீது கைவைக்காமல் பி.ஆர். பழனிச்சாமி போன்ற புள்ளிகளை வளைத்து இறுக்கமான சட்டப் பிரிவுகளைப் போட்டுவிட்டு அதன் பின்னர் அழகிரி மகன் துரை தயாநிதி போன்றவர்களை அமுக்குவது என்று முடிவு செய்யபப்ட்டிருக்கிறதாம்.
அனேகமாக இந்த வலையில் துரை தயாநிதி, பொன்முடி போன்ற வகையறாக்களும் விழுந்தாக வேண்டிய நிலையில்தான் இருக்கின்றராம். இவர்களை நெருங்குவதற்கு முன்பாக அவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள், பினாமிகள் ஆகியோரை வளைத்து வைத்திருக்கின்றனர்.
பி.ஆர்.பி. விவகாரத்தில் சொத்துகளை முடக்குவது தொடர்பாக தமிழக அரசு தீவிரம் காட்டுவதும் இதற்காகத்தான் என்று சொல்லப்படுகிறது. பி.ஆர்.பி. சொத்துகளை முடக்கிவிட்டு துரை தயாநிதியை தூக்கும் போது அழகிரி சொத்துகளை முடக்குவது என்பது எளிதாக இருக்கும் என்பதுதான் அரசின் கணக்காக இருக்கிறதாம்.
அதிமுகவை உடைக்க சசி தரப்புடன் சேர்ந்து பிளான் போட்டாரா பிஆர்பி?:
இதனிடையே சசிகலாவின் குடும்பத்தினருடன் சேர்ந்து அதிமுகவை உடைக்க பி.ஆர். பழனிச்சாமி சதி செய்ததாக அரசுக்கு கிடைத்த தகவல்தான் பி.ஆர்.பழனிச்சாமி மீதான நடவடிக்கைக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் பி.ஆர். பழனிச்சாமி தரப்பு இதனை நிராகரித்துள்ளது. அரசைப் பொறுத்தவரையில் பி.ஆர்.பழனிச்சாமிதான் இப்போதைக்கு செம துருப்புச் சீட்டு. இதை வைத்து திமுகவின் பெரும் புள்ளியான அழகிரியை அசைத்துப் பார்த்துவிடும் உற்சாகத்தில்தான் இருக்கிறதாம் தமிழக அரசு.