கிரானைட் முறைகேடு- தாசில்தார் உட்பட 9 பேர் இடைநீக்கம்- ஓய்வு பெற்ற அதிகாரிகள் மீதும் நடவடிக்கை
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரத்தில் கிரானைட் முறைகேடுக்கு உடந்தையாக இருந்ததாக தாசில்தார் உட்பட 9 வருவாய்த்துறை அலுவலர்களை இடைநீக்கம் செய்து ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
மேலூர் சுற்றுவட்டாரத்தில் பி.ஆர்.பி. நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டது அண்மையில் அம்பலத்துக்கு வந்தது. இது தொடர்பாக அப்பகுதியில் தொடர்ந்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.இந்த முறையான ஆவணங்கள் இல்லாமல் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலூர் தாசில்தார் ருக்மணி, துணை தாசில்தார் மோகன், வி.ஏ.ஓ.க்கள் கே.சுப்புராஜ் (கீழவளவு), வி.வி.செல்வராஜ் (சருகுவலையப்பட்டி), ஏ.சேட்பாபு (தெற்கு தெரு), கே.பொன்னையா (சொக்கம்பட்டி) ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்பட்டா மாறுதல் கோப்புகளை பாதுகாப்பு அறையில் (ரெக்கார்டு ரூம்) சரியாக பராமரிக்காமலும், ஆய்வுக்கு சமர்ப்பிக்காமலும் இருந்த வைப்பறை பிரிவு ஊழியர்களான ராஜேந்திரன், (இளநிலை வருவாய் உதவியாளர்), பாலசுப்பிரமணியன் (வைப்பறை எழுத்தர்), முத்துக்கிருஷ்ணன் (அலுவலக உதவியாளர்) ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், முறையான ஆவணங்கள் இல்லாமல் பட்டா மாறுதல் வழங்கியதில் தொடர்புடைய ஓய்வுபெற்ற தாசில்தார்கள் ராஜேசுவரி, ஸ்ரீதரன், துணை தாசில்தார்கள் தில்லை நடராஜன், குழந்தைவேலு, வி.ஏ.ஓ.க்கள் கர்ணன், பரந்தாமன், எம்.பாண்டியன் ஆகியோர் மீதும் அரசு விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
வருவாய்த்துறை அதிகாரிகள் மீதான நடவடிக்கையைத் தொடர்ந்து கனிம வளத்துறையிலும் நடவடிக்கை பாய இருக்கிறது.