டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 வினாத்தாளை அவுட்டாக்கிய விவகாரம்- முக்கிய குற்றவாளி பாலன் கோர்ட்டில் சரண்!
கோயம்புத்தூர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வுக்கான வினாத்தாளை முன்கூட்டியே வெளியிட்ட விவகாரத்தில் போலீசார் தேடிவந்த முக்கிய குற்றவாளியான பாலன் என்ற ஸ்ரீதர்ராஜ் கோவை நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.
கடந்த 12-ந் தேதி நடைபெற்ற குரூப் 2 தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது தொடர்பாக தேர்வு எழுதிய பவானியை சேர்ந்த தனக்கொடி, அவரது கணவர் செந்தில், வரதராஜன், சுதாகர் ஆகிய 4 பேரை ஈரோடு போலீசார் கைது செய்திருந்தனர். இதில் வரதராஜனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையைச் சேர்ந்த பாலன் என்பவரிடம் இருந்து ரூ80 லட்சத்துக்கு வினாத்தாளை மின் அஞ்சல் மூலம் பெற்றது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து பாலனை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். ஆனால் பாலன் சிக்கவில்லை. பாலனின் கூட்டாளிகள் மூவர்தான் பிடிபட்டனர். இதைத் தொடர்ந்து தம்மை போலீஸ் நெருங்கியதை உணர்ந்த பாலன் என்கிற ஸ்ரீதர்ராஜ் நேற்று மாலை கோவை 3-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பாலனை 24-ந் தேதி சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு ரமேஷ்பாபு உத்தரவிட்டார்.
குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தமிழகம் முழுவதும் தேடப்பட்ட வந்த பாலன் தற்போது சரணடைந்துவிட்டதால் அவருக்கு வினாத்தாளை கொடுத்த நபர் யார் என்ற விவரம் விரைவில் தெரியவந்து விடும். பாலனை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்திருக்கின்றனர்.