பூந்தமல்லி முகாமில் உண்ணாவிரதம் இருக்கும் செந்தூரன் இறந்தால், தமிழக அரசு தான் பொறுப்பு: வைகோ
கரூரில் செப்டம்பர் 15ம் தேதி திராவிட இயக்க நூற்றாண்டு விழா மற்றும் மதிமுக மாநாடு நடைபெறுகிறது. இதயொட்டி சேலம்-கரூர் சாலையில் மாநாடு நடைபெறவிருக்கும் இடத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கரூரில் செப்டம்பர் 15ம் தேதி நடைபெற உள்ள மதிமுக மாநாட்டுக்கு கிளியநல்லூர் இரா. நடராஜன் பெயரும், மாநாட்டுப் பந்தலுக்கு கரூர் சாமியப்பன் பெயரும், நுழைவு வாயிலுக்கு தொழிற்சங்கவாதி மூர்த்தி பெயரும் சூட்டப்படும்.
இந்த மாநாட்டில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்றும், விவசாயிகள், மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், தமிழகத்தின் நீராதாரங்களை தடுக்கும் அண்டை மாநிலங்களை கண்டிக்காத மத்திய அரசைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
கரூர் மாநாடு இந்திய அரசியலில் மதிமுகவுக்கு புதிய எழுச்சியை ஏற்படுத்தும். திராவிட இயக்கத்தை எதிர்ப்பவர்களுக்கு பதில் சொல்லும் வகையில் இந்த மாநாடு அமையும்.
மேலும், பூந்தமல்லி அகதிகள் முகாமில் உண்ணாவிரதமிருந்து வரும் செந்தூரன் உயிரிழந்தால் அதற்கு தமிழக அரசு தான் பொறுப்பு. இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சரியான அணுகுமுறையை பின்பற்றி வரும் தமிழக அரசு, இந்தப் பிரச்னையிலும் அதே போன்ற அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்றார்.